திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் 'சோலார் பேனல்' ஊழல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபர் சரிதா நாயர். இவர் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக் கில் பணம் வசூலித்துவிட்டு மோசடி செய்துவிட்டதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை யில் அவர் வெளியில் உள்ளார். இந்த நிலையில் சோலார் பேனல் மோசடியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பதவி வகித்த பல அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு என்று சரிதா நாயர் புகார் கூறி இருந்தார்.
அத்துடன், முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மீதும் அவர் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சோலார் பேனல் மோசடி பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு உம்மன்சாண்டி முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளார். சரிதா நாய ரும் விசாரணை ஆணையத்திடம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். தனது புகார்களுக்குத் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவற்றை தாக்கல் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதற்கு தனக்கு அவகாசம் வேண்டும் என்றும் சரிதா தெரிவித்திருந்தார்.
ஆனால் அதன் பிறகு அவர் எந்த ஆதாரத்தையும் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஆணையம் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் சரிதா நாயர் முன்னிலையாக வில்லை. நேற்று முன்தினமும் அவர் முன்னிலையாகத் தவறிவிட்டார். அதனால் அவருக்கு நீதிபதி சிவ ராஜன் பிணையில் வெளிவர இயலாத வகையில் கைதாணை பிறப்பித்து உத்தரவிட்டார். "வரும் 27ஆம் தேதி ஆணையத்தின் முன்பு சரிதா நாயர் முன்னிலையாக வேண்டும். தவறினால் அவரை கைது செய்ய வேண்டும்," என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.