மதுரை: பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் மதுக்கடையை மாணவர்களும் அப்பகுதி பெண்களும் ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்கினர். அழகர்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்ட மதுக்கடை அண்மையில் மூடப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள கரைப்பட்டி கிராமத்தில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டது.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையைப் பயன்படுத்தி புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மது அருந்திவிட்டு பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மாணவர்களும் பெண்களும் செவ்வாய்க்கிழமை அந்த மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதையடுத்து மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.