சென்னை: இந்தியாவின் தேசிய மொழியாகத் திகழ்வதற்கு இந்தியைவிட தமிழ்தான் மிகவும் பொருத்தம் என்று திமுக வாதிட்டு இருக்கிறது. ‘இந்தி மொழியே இந்தியாவின் அடையாளமாகத் திகழவேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோட்பாட்டின்படி இந்தியே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கவேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் பிரச்சினையைக் கிளப்பிவிட்டது. தான் கூறிய கருத்து தவறாகப் பொருள்கொள்ளப்பட்டு விட்டது என்று அமித் ஷா விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து திமுக தரப்பில் இன்று நடக்கவிருந்த பிரம்மாண்டமான போராட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது.
இந்த நிலையில், இந்த விவகாரம் பற்றி கருத்துரைத்த திமுகவின் பேச்சாளரான டி.கே.எஸ் இளங்கோவன், “இந்திய அரசாங்கம் இந்தியாவின் உலக அடையாளமாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் அந்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். இந்திக்கு அந்தத் தகுதி இல்லை,” என்று கருத்து கூறினார்.
“வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம். இதை நாம் ஆதரிக்கிறோம்.உலகளவில் இந்தியாவை எடுத்துக் காட்டுவதற்கு ஒரு மொழி தேவை என்றால் அதற்குத் தமிழ் மொழியே மிகவும் பொருத்தமானது,” என்று திரு இளங்கோவன் கூறியதாக இந்தியாவின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.
“தமிழ், உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்று. இலங்கை, சிங்கப்பூர், இந்தியாவில் அதிகாரத்துவ மொழியாக இருக்கும் தமிழ், ஒரு செம்மொழியாகும். அதன் இலக்கிய வளம் மிகவும் செரிவுமிக்கது. தமிழ் கலாசாரம் பல கண்டங்களில் பரவி இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தொலைதூரங்களுக்கு விரிவடைந்து இருக்கிறார்கள்.
“இந்தியாவில் இந்தி மொழியைப் பேசுபவர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்தி மொழியைப் பேசாதவர்களும் அந்த அளவுக்கு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.
“இந்தி பேசாத இந்திய மாநிலங்கள்தான் பொருளியல், அறிவியல், கல்வி உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னணியில் திகழ்கின்றன,” என்று இளங்கோவன் கருத்து தெரிவித்தார்.