புதுடெல்லி: நாளை நடைபெற உள்ள தமது பதவி ஏற்பு விழாவில் டெல்லி மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்துக்கு கெஜ்ரிவால் போல் வேடமிட்டு வந்த சிறுவனுக்கும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு ஆம் ஆத்மி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது சிறுவன் வாக்கு எண்ணிக்கை அன்று தனது பெற்றோருடன் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வந்திருந்தான்.
கெஜ்ரிவால் போல் தொப்பி, மஃப்ளர் அணிந்து, அவரைப் போன்றே மீசை வரைந்து கொண்டு, சிறிய கண்ணாடியும் அணிந்து வந்த சிறுவனை அனைவரும் பார்த்து ரசித்தனர்.
சிறுவனின் புகைப்படமும், அவனைப் பற்றிய காணொளிகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக வெளியாகின. இதையடுத்து அச்சிறுவனுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே, கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. பதவியேற்பு நிகழ்வு என்பது டெல்லிக்கான குறிப்பிட்ட நிகழ்ச்சி என்பதால், யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.