மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திருமலைக்கு சென்ற பக்தர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த 78 வயது ஆடவருக்கு திருமலை அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருமலையில் கொரோனா கிருமி பரவாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று காலை மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பக்தர் குழு ஒந்று திருமலைக்கு வந்தது. அந்த 78 வயதான தாமோதர் எனும் ஆடவர் உட்பட 21 பேர் கொண்ட குழு, கடந்த வாரம் சுற்றுலா புறப்பட்டதாகவும் அவர்கள் முதலில் காசிக்குச் சென்று பின்னர் திருப்பதிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திரு தாமோதருக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதாகவும் திருமலையில் நேற்று அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், தேவஸ்தான அதிகாரிகளும் பக்தர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று அச்சத்தின் காரணமாக 128 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டது.
இன்று காலை ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்ற பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்த பின், கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளதாக அது தெரிவித்தது.
ஒரு வாரத்திற்கு பின் கரோனா தொற்றின் வேகம் குறையத் தொடங்கினால் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. கிருமித் தொற்றின் வேகம் அதிகரிக்கும் நிலையில் இந்த அனுமதி மறுப்பு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலை மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்திற்கு சம்மந்தப்பட்ட கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றது அந்தத் தகவல்.
அவ்வாறு நடக்கும்பட்சத்தில், 1892 ஆம் ஆண்டிற்கு பின் தற்போது 128 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியை ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
#திருமலை #கொரோனா