புதுடெல்லி: நாட்டில் உள்ள ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் குழு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவித்தது.
விவசாயிகள் இனி தாங்கள் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்றும், கிசான் அட்டைகள் மூலம் கடன்களைப் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனி மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி விவசாயிகள் பொருட்களை விற்க இயலும் என்றார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும் கிராமப்புற வளர்ச்சிக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
சிறு, குறு தொழில்துறையின் வளர்ச்சிக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், தொழில்துறை வளர்ச்சிக்காக கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.