மும்பை: மும்பை, நாக்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள விரைவு சாலையோரத்தில் புதிதாக 24 நகர்ப்புற குடியிருப்புகள் உருவாக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலம் முழுவதும் சுமார் 2.95 மில்லியன் விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.
கொரோனா கிருமித் தொற்று காரணமாக தற்போது பள்ளிகளைத் திறக்க முடியவில்லை என்றாலும், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழி கல்விச் சேவை அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டிலேயே மகாராஷ்டிரா அரசு மட்டுமே இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 66 ஆயிரம் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் 14 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
“மும்பை, நாக்பூர் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இந்தப் பணி முடிவடையும். அதன் பின்னர் விரைவு சாலையோரம் 24 புதிய நகர்ப்புற குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்படும். 12 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் 16 ஆயிரம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றார் முதல்வர் உத்தவ் தாக்கரே.