புதுடெல்லி: இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் தொடர்பான பதிவுகளை ஃபேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இதுதொடர்பாக ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளைப் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக தரப்பு முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ள ராகுல், வாட்ஸ்அப்பின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டை பாஜக தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஃபேஸ்புக், இந்தியாவின் முந்தைய ஆட்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவாக இருந்ததாக பாஜக பிரமுகர்கள் சாடியுள்ளனர்.
“ஃபேஸ்புக்கின் முன்னாள் செயலர்களுக்கு முந்தைய அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சிகளுடனும் தொடர்புகள் இருந்தன. சிலர் பிரதமர் குறித்து வெளிப்படையாக விமர்சித்தும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்பபடுவது நகைப்புக்குரியது,” என மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் தேர்தலுக்கு முன்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, ஃபேஸ்புக் ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சிதான் கூட்டணி அமைத்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
“அச்சமயம் தேவையான தரவுகளைப் பெற்று கையும் களவுமாகப் பிடிபட்ட காங்கிரஸ் தற்போது எங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. தங்கள் சொந்தக் கட்சியில் உள்ள தலைவர்களைக் கூட காப்பாற்ற முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர்,” என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இத்தகைய தகவல்கள் தவறானவை என ஃபேஸ்புக் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் மற்றும் கட்சி சார்பற்ற கொள்கைகளை மட்டுமே கடைபிடித்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.