இந்தியாவின் வடக்கு எல்லையில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே சீனா 60,000க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் அதை எதிர்கொள்ள இந்தியாவும் அப்பகுதியில் கண்காணிப்பை அதிகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு மே மாதத்தில் இருந்து லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், திரு பொம்பியோவின் கருத்து வெளிவந்துள்ளது.
ஜப்பானிய தலைநகர் தோக்கியோவில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்று விட்டு அமெரிக்கா திரும்பியவுடன் பல்வேறு நேர்காணல்களில் திரு பொம்பியோ பங்கேற்றார். அப்போது அவர் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
“இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பானைச் சேர்ந்த எனது சக வெளியுறவு அமைச்சர்களை நான் சந்தித்தேன். அமெரிக்காவையும் சேர்த்து இவை அனைத்தும் பெரிய ஜனநாயக நாடுகள், நான்கு சக்திவாய்ந்த பொருளியல்கள் இவற்றிடம் உள்ளன. இவை அனைத்திற்கும் சீனாவின் மோசமான நடத்தை அச்சுறுத்தலாக உள்ளது.
“இந்த விவகாரத்தில் இவ்வளவு காலமாக நாங்கள் தூங்கிவிட்டோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று திரு பொம்பியோ கூறினார்.
சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்நோக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ‘குவாட்’ கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை திரு பொம்பியோ சந்தித்தார்.
அப்போது இந்திய-பசிபிக் பகுதி மட்டுமின்றி உலகெங்கிலும் அமைதி, செழிப்பு, பாதுகாப்பை உறுதிசெய்ய இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து தாங்கள் கலந்து உரையாடியதாக திரு பொம்பியோ சொன்னார்.