அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்து நிகழ்ந்ததால் ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார்.
அவருக்குப் பிறகு தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவருடைய மகனான ஜெகன் மோகன் ரெட்டி எதிர்பார்த்தார். ஆனால், பதவி எதையும் தராமல் ஜெகன்மோகன் ரெட்டியை காங்கிரஸ் ஒதுக்கிவைத்தது.
அதனால் விரக்தி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
அவர், பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இப்போது ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்து முதல்வராக ஆட்சி புரிகிறார்.
இவ்வேளையில், ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க உறுதுணையாக இருந்த அவரின் தங்கையான சர்மிளா, ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக உள்ள தெலுங்கானா மீது தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.
தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்துள்ள சர்மிளா, அதற்காக வரும் ஜூலை 8ஆம் தேதி புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
ஜூலை 8ஆம் தேதி, சர்மிளாவின் தந்தையான ராஜசேகர ரெட்டியின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று தனது கட்சியின் புதிய பெயர், சின்னம், கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப்போவதாக சர்மிளா தெரிவித்து இருப்பது தெலுங்கானாவில் அரசியல் புயலைக் கிளப்பி இருக்கிறது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
அந்த மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைச் சந்திப்பதற்காக சர்மிளா காய்களை இப்போதே மிகவும் விவேகமாக நகர்த்துகிறார்.