பெங்களூரு: இரு வாரங்களுக்குமுன் கொரோனாவிடம் தாயைப் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி (படம்), இப்போது தம் மூத்த சகோதரியையும் அதனிடம் இழந்துவிட்டார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி இவரின் தாயார் செலுவம்பா தேவி மரணமடைந்தார்.
இந்நிலையில், கிருமித்தொற்றுக்காக கர்நாடக மாநிலம், சிக்கமளூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேதாவின் சகோதரி வத்சலா, 45, கடந்த புதனன்று இறந்து விட்டார். அவருடைய கணவர் சில ஆண்டுகளுக்குமுன் மாண்டு போனது குறிப்பிடத்தக்கது. அத்தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்திய அணிக்காக இதுவரை 48 ஒருநாள் போட்டிகளிலும் 76 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள வேதாவிற்குத் 'தொற்று இல்லை' எனப் பரிசோதனையில் உறுதியானது.
அடுத்தடுத்து தாயையும் தமக்கையையும் இழந்து வாடும் வேதாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.