புதுடெல்லி: ஏர் இந்தியா விமானம் ஒன்று நடை மேம்பாலத்தின்கீழ் சிக்கிக்கொண்ட காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
டெல்லி விமான நிலையத்திற்கு அருகே, டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நடை மேம்பாலத்திற்குக் கீழே அந்த விமானம் சிக்கியிருப்பதைக் காணொளி காட்டுகிறது.
இதனையடுத்து, விமானம் நெடுஞ்சாலையில் ஏன் வந்தது என்று இணையவாசிகள் பலரும் வியப்படைந்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஏர் இந்தியா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அவ்விமானம் விற்கப்பட்டுவிட்டதாகவும் அதன் புதிய உரிமையாளர் அதனைச் சாலை வழியாக எடுத்துச்சென்றதாகவும் ஏர் இந்தியா தெரிவித்தது.
பழைய விமானங்கள் மறுசுழற்சி வணிகர்களுக்கு விற்கப்படுவது வழக்கம் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறினார்.
விற்கப்பட்ட விமானத்தை எடுத்துச் செல்வது அதை வாங்கியவரின் பொறுப்பு என்றும் அதனால் நடை மேம்பாலத்தின்கீழ் விமானம் சிக்கிக்கொண்டதற்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் ஏர் இந்தியா விளக்கமளித்தது.