புதுடெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதிநவீன அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
அணுகுண்டுகளைத் தாங்கிச் சென்று, 5,000 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை ஒலியைவிட வேகமாக செல்லக்கூடியது.
நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்திற்கு 29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது.
ஒடிசா மாநிலத்திலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து நேற்று புதன்கிழமை இரவு இந்திய நேரப்படி இரவு 7.50 மணிக்கு ஏவுகணை செலுத்தப்பட்டதாக இந்திய தற்காப்பு அமைச்சின் செய்தி தெரிவித்தது.
திட எரிபொருளால் இயங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்தது. சோதனையில் முழு வெற்றி கிடைத்துள்ளதை அடுத்து, அந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என்று அச்செய்தி கூறியது.
அக்னி-5 ஏவுகணை கிட்டத்தட்ட 50,000 கிலோ எடையும் 17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சினையால் இருநாடுகளும் எல்லைகளில் படைகளைக் குவித்து வருகின்றன. இச்சூழலில் இந்தியாவின் இந்த ஏவுகணைச் சோதனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் இந்த ஏவுகணையைக் கொண்டு சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும்.
சீனா 12,000 கிலோமீட்டர் முதல் 15,000 கிலோமீட்டர் வரை பாய்ந்து தாக்கும் டாங்ஃபெங் - 41 ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் அணுவாயுதங்களைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அணுவாயுதத் தற்காப்புத் திறனை அக்னி-5 அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.