புதுடெல்லி: தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகளாவிய தீவிரவாதத்தின் புகலிடமாக மாறிவிடக்கூடாது என்றும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் முடிவு செய்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்தியா தனது பாதுகாப்பு, எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் புதிய அரசை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் அவசரம் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பத்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் அழைப்பை புறக்கணித்துவிட்டன.
இதைடுத்து இந்தியா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் மாநாட்டில் பங்கேற்றன.
முதலில் பேசிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அந்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளிலும் வட்டார அளவிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார்.
இதர நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடக் கூடாது என்றும் தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிக்கும், திட்டம் வகுக்கும் நிதியுதவி செய்யும் மண்ணாக மாறிவிடக்கூடாது என்றும் எட்டு நாடுகளும் வலியுறுத்தின. இது தொடர்பான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களைக் கண்டிப்பதாகவும் அங்கு நிகழும் துயரச் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் எட்டு நாடுகளும் தெரிவித்துள்ளன.
"ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகளும் தடையின்றிக் கிடைக்க வேண்டும். அந்த உதவிகள் நேரடியாக அம்மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுடன் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்," என்று எட்டு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் வலியுறுத்தினர்.