பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர தடை விதித்துள்ளது.
நேற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவாஸ் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, பாதிக்கப்பட்ட மாணவிகள் வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே இவ்வாறான பாகுபாடு காட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அரசுத் தலைமை வழக்கறிஞர், பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு மதத்தினர் பலவிதமான உடைகளை அணிந்து வருவதை அனுமதிக்க இயலாது என்றார்.
வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஹிஜாப் விவகாரம் காரணமாக நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்வதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையை, கர்நாடகாவில் இந்த விவகாரம் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து நேற்று மாலை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொண்டார்.
வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் நிலவும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாக வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்களை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கப் போவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று டெல்லியில் அனைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது கர்நாடக அரசுக்கு எதிராகவும் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நேற்று காலை உச்ச நீதிமன்றத்தை அணுகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரமணாவைக் கேட்டுக் கொண்டார். ஆனால் தலைமை நீதிபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
"எதற்காக அவசரப்பட வேண்டும். முதலில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்," என்று கூறினார் நீதிபதி ரமணா.