புதுடெல்லி: உக்ரேன் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய், கோதுமை போன்றவற்றின் விலை ஏறிவிட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கோதுமை உற்பத்தியில் இந்தியா தற்சார்பான நிலையில் இருப்பினும் போர் காரணமாக வெளிநாடுகளுக்கான கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் பட்சத்தில் உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு என வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில தினங்களில் கோதுமை விலை கிலோ 21 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக அதிகரித்துவிட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஒரு மூட்டை கோதுமை விலை 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால், மைதா, ரவை போன்ற உணவுப்பொருள்களின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் உட்பட அனைத்து எண்ணெய் விலைகளும் படிப்படியாக உயர்ந்த வண்ணம் உள்ளன.
போர் காரணமாக எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.