பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது. அரசின் இந்த உத்தரவு செல்லும் என பெங்களூரு உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் நேற்று பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கின. நேற்று ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் எவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். அரசு விதிகளை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.