உணவுப்பொருள்கள், சர்க்கரை விலை அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை
புதுடெல்லி: கோதுமையைத் தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது. பண வீக்கம் அதிகரித்ததை அடுத்து மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் சர்க்கரை விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும் என மத்திய அரசு கருதுகிறது.
ஏற்கெனவே கோதுமை, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அவை இரண்டுக்கும் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்ததால், கோதுமை உற்பத்தி குறைந்துபோனது. இதனால் கோதுமை விலை வேகமாக உயர்ந்தது.
இதேபோல் உலக அளவில் சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றைக் கவனத்தில் கொண்ட மத்திய அரசு, உள்நாட்டுத் தேவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக கோதுமை, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. தற்போது அந்தப் பட்டியலில் சர்க்கரையும் இணைந்துள்ளது.
சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் முன்பே மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும்.
உக்ரேன், ரஷ்யா மோதல் காரணமாக அவ்விரு நாடுகளில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை அளவு கடந்த இரு மாதங்களில் வெகுவாக அதிகரித்தது.
இதற்கிடையே, தடைவிதிக்கப்பட்ட போதிலும் உணவு, பொது விநியோகத் துறை இயக்குநரகத்தின் ஒப்புதலுடன் சர்க்கரையை பகுதியளவு ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்தப் புதிய தடை காரணமாக உள்நாட்டில் சர்க்கரை விலை குறையும் என்றும் உணவுப் பண வீக்கம் கட்டுக்குள் வரும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு 60 முதல் 65 மெட்ரிக் டன் அளவு சர்க்கரை இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோக அமைச்சு தெரிவித்தது.