புதுடெல்லி: விளையாட்டுத் திடல் வசதிகள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறந்து இருக்க வேண்டும் என்று புதுடெல்லி அதிகாரிகள் நேற்று ஆணையிட்டனர்.
ஓர் அதிகாரி தன்னுடைய நாயுடன் நடை உலா வருவதற்குத் தோதாக ஒரு விளையாட்டுத் திடல் ஒவ்வொரு நாளும் மாலையில் முன்னதாகவே மூடப்படுகிறது என்று புகார் கிளம்பியதை அடுத்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லியில் இருக்கும் தியாகராஜ் விளையாட்டுத் திடல் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் கிர்வார் தனது நாயுடன் உலா வருவதற்கு வசதியாக மாலை 7 மணிக்கு மூடப்பட வேண்டிய நிலை இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தெரிவித்திருந்தது.
ஆனால் அத்தகைய ஒரு நிலை இல்லை என்று இதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றன.
இந்த நிலையில், புதுடெல்லி அதிகாரிகள், எல்லா விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை செயல்பட வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.