முதல்வர் கூட்டிய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்பு
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை சபாநாயகருக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதற்குப் பதிலடி தரும் விதமாக தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களின் கூட்டத்தை நடத்தியுள்ளார் சிவசேனா தலைமைக்கு எதிராகக் களமிறங்கியுள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. மேலும் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 37 பேரின் கையெழுத்துடன் மகாராஷ்டிர ஆளுநருக்கும் பேரவை துணை சபாநாயகருக்கும் அவர் கடிதமும் எழுதியுள்ளார்.
மிக விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஐம்பது சிவசேனா எம்பிக்களின் ஆதரவு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, மீண்டும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கட்சித் தலைமைக்கு எதிராக உள்ள சிவசேனா எம்ஏல்ஏக்கள் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து சிவசேனா கட்சி சின்னத்தை முடக்குவது அல்லது கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ஏக்நாத் ஷிண்டே தரப்பு மேற்கொள்ளும் என்றும் கூறப்படுவதால், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் சிவசேனா எம்பிக்கள் உடனடியாக மும்பை திரும்பினால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சிவசேனா தலைமை அறிவித்து இருப்பது, அவ்விரு கட்சிகளையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கருதப்பட்ட இரண்டு எம்எல்ஏக்கள் மும்பை திரும்பி உள்ளனர்.