மும்பை: வாடிக்கையாளர் சேவை மையம் என்ற பெயரில் அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி, பணம் சுருட்டிய 16 பேர் கொண்ட கும்பல் மகாராஷ்டிராவில் சிக்கியது.
இந்தக் கும்பல் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அம்மாநில காவல்துறையினர் மும்பையின் தானே பகுதியில் உள்ள கட்டடத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டபோது அனைவரும் கைதாகினர். அவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.
"அமெரிக்காவில் உள்ளவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கடன்களை அளிப்பதாகக் கூறியுள்ளனர். கடன் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளவர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து பேசி அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளனர்.
"அதன் பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை வேறு கணக்குகளுக்கு மாற்றி உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது," என்று மும்பை காவல்துறை தெரிவித்தது.
அமெரிக்காவில் அக்கும்பலின் முகவராகச் செயல்பட்ட ஒருவர், இந்த மோசடிப் பணப்பரிமாற்றத்தில் உதவியுள்ளார். அமெரிக்காவில் ஏமாற்றப்படுபவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை முறைகேடாக எடுக்கும் அந்தத் தரகர், பின்னர் ஹவாலா முறை மூலம் இந்தியாவுக்கு அத்தொகையை அனுப்பியுள்ளார்.
இந்த மோசடிக் கும்பல் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை காவல்துறை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.