பெங்களூரு: அரசுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களைப் பயன்படுத்த பாஜக அரசு புதிய திட்டம் வகுக்கும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற அனைத்துலக முதியோர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.
"முதியோர் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ பாஜக அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு இரு முறை இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதுடன், அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதற்காக இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.
"மாநிலத்தில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் ஆலோசனைகள் தேவையாக உள்ளது. குறிப்பாக அரசுப் பணிகளுக்கு அனுபவம் முக்கியமாகும்.
"இதற்காக அரசுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம்," என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.