கௌஹாத்தி: அசாம், மேகாலயா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இறந்தவர்களில் ஐந்து பேர் மேகாலயாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொருவர் அசாம் வனத்துறை அதிகாரி என்றும் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் அசாம் வனப்பகுதியில் இருந்து ஒரு லாரியில் தேக்கு மரங்கள் கடத்திச் செல்லப்படுவதை அறிந்த வனத்துறையினர், அந்த லாரியைத் துரத்திப் பிடித்தனர். அதற்குள் அந்த லாரி மேகாலயா எல்லைக்குள் நுழைந்துவிட்டது.
பின்னர் தேக்கு மரங்களைப் பறிமுதல் செய்ய வனத்துறையினர் முயன்றபோது, அந்த லாரி மடக்கிப் பிடிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதில் வனத்துறை அதிகாரி உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தற்காப்புக்காகச் சுட்டதில் மேகாலயா கிராம மக்கள் ஐவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் நேற்று காலை முதல் இணையத்தளச் சேவை முடக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.
கிராம மக்கள் ஐந்து பேர் உயிரிழந்ததை மேகாலயா முதல்வர் உறுதி செய்துள்ளார். கிராம மக்கள்தான் முதலில் தாக்கியதாகவும் இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்புஉள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதாக மேகாலயா அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.