42 ஆண்டுகளாக மூடியே கிடந்த ‘பேய்’ ரயில் நிலையம்

42 ஆண்டுகளாக மூடியே கிடந்த ‘பேய்’ ரயில் நிலையம்

2 mins read
aa59a569-3d84-418a-87bd-e405211925db
மேற்கு வங்காளத்தில் புருலியா என்ற மாவட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி பிரிவுக்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி என்ற பகுதியில் அமைந்து இருக்கிறது பெகுன்கோடர் ரயில் நிலையம். - படம்: இந்திய ஊடகம் 

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் புருலியா என்ற மாவட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி பிரிவுக்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி என்ற பகுதியில் பெகுன்கோடர் என்ற ரயில் நிலையம் அமைந்து இருக்கிறது.

கடந்த 1960களில் மிகப் பரபரப்பாக இருந்த அந்த ரயில் நிலையம் இப்போது மக்கள் பயந்து நடுங்கும் ஒரு நிலையமாக ஆகி இருக்கிறது.

அந்த நிலையத்தில் இப்போதும் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள். நாய், பூனை முதலான விலங்குகளையும் அங்கு பார்க்க முடியாது என்ற அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த நிலையம் வழியாக ரயில்கள் போகும்போது ரயில் பெட்டிகளின் கதவுகளை மூடிக்கொண்டு பயணிகள் மௌவுனமாக பயந்தபடி பதுங்கிக் கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை சேலை அணிந்திருந்த ஒரு பெண் கடந்த 1967ல் அந்த ரயில் நிலையத்தைச் சுற்றி திரிந்ததாகவும் பிறகு அங்கு தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்தப் பெண்ணின் ஆவி 24 மணி நேரமும் அந்த நிலையத்தைச் சுற்றி சுற்றி வருவதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.

தொடக்கத்தில் இதை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த நிலையத்தில் பணியாற்றிய தலைமை ஊழியரும் அவரது குடும்பத்தினரும் அந்த நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து கிடந்தனர்.

அதையடுத்து மக்களிடம் பயம் கூடிவிட்டது. ரயில்வே ஊழியர்கள் யாரும் அந்த நிலையத்தில் வேலை பார்க்க முன்வராததால் நிலையம் கடந்த 42 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது.

ரயில்கள் மட்டும் அந்த வழியாக இப்போதும் வந்து செல்கின்றன.

மூடியே கிடந்த அந்த நிலையம், கடந்த 2009ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜியின் முயற்சியால் இந்த ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

ஆனாலும் இன்னமும் ஊழியர்கள் யாரும் அதில் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
ரயில் நிலையம்