கோல்கத்தா: உள்ளாட்சிப் பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக மேற்கு வங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம், திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சரான பிர்ஹாத் ஹக்கீம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடைய தலைவராக விளங்குபவர். தெற்கு கோல்கத்தாவின் செட்லா பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்தனர். 2 சிபிஐ அதிகாரிகள் அமைச்சரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் அமைச்சரின் வீட்டின் முன்பு திரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கும் பாஜக தலைவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கமர்ஹாட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மதன் மித்ராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கமர்ஹாட்டி நகராட்சிப் பணி நியமன ஊழலில் மித்ராவுக்கு முக்கிய பங்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காஞ்சராபாரா, ஹலிசஹர், கிருஷ்ணா நகர் ஆகிய நகராட்சிகளின் முன்னாள் தலைவர்கள் சுதாமா ராண், அங்ஷுமன் ராய், ஆசிம் கோஷ் ஆகியோரின் கட்டடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
‘மக்களைத் திசைதிருப்பவே முயற்சி’
நிதிப் பகிர்வு விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக அபிஷேக் பானர்ஜி தலைமையில் நடக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தைத் திசைதிருப்பவே சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் குற்றம் சாட்டினார்.
முன்னதாக உணவு அமைச்சர் ரத்தின் கோஷ் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அரசாங்கப் பணிகளுக்கு ஆள்களை பணியமர்த்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
2023 ஏப்ரல் 21ஆம் தேதி கோல்கத்தா உயர் நீதிமன்றம் நகராட்சிப் பணி நியமனம் ஊழல் குறித்து விசாரிக்க புலனாய்வுத்துறை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிரடிச் சோதனைகளில் இறங்கியுள்ளது.