புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் ‘பாதுகாப்பு உதவியாளர்களாகச்’ சேர்க்கப்பட்டிருக்கும் இந்தியர்களைக் கூடிய விரைவில் விடுவிக்கும்படி மாஸ்கோவைக் கேட்டுக்கொண்டதாக புதுடெல்லி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் விழிப்புடன் இருக்கும்படியும் உக்ரேனியப் போரிலிருந்து விலகியிருக்கும்படியும் இந்தியக் குடிமக்களிடம் அது வலியுறுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு (2023) இந்தியக் குடிமக்கள் கிட்டத்தட்ட 100 பேர் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இத்தகைய வேலைக்குச் சேர்க்கப்பட்டதாக த இந்து நாளிதழ் கூறியதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சின் தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் ரஷ்ய ராணுவத்தில் வேலைதேடுவதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
“இந்தியக் குடிமக்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் வேலைக்குச் சேர ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரஷ்ய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களை முன்கூட்டியே விடுவிக்க இந்தியத் தூதரகம் முயல்கிறது. ரஷ்யா-உக்ரேன் பிரச்சினையிலிருந்து விலகியிருக்கும்படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆலோசனை கூறப்படுகிறது,” என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் அமைந்துள்ள ரஷ்யத் தூதரகம் இதுபற்றிக் கருத்துரைக்கவில்லை. ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அணுக்கமான தற்காப்பு, வர்த்தக உறவுகள் நீடிக்கின்றன.
நேப்பாளம் தனது குடிமக்கள் ரஷ்யாவிலோ உக்ரேனிலோ வேலைபார்க்க வழங்கிவந்த அனுமதியை சென்ற மாதம் காலவரையறையின்றி நிறுத்திக்கொண்டது.
ரஷ்ய ராணுவத்தில் வேலைபார்த்த நேப்பாள வீரர்கள் ஏறக்குறைய 10 பேர் மாண்டதையடுத்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுத்தது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அதைக் குறிப்பிடுகிறது மாஸ்கோ.
இந்தப் படையெடுப்பால் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மாண்டுவிட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் ஆக மோசமான போராக இது கருதப்படுகிறது.