பெங்களூரு: வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியக் குடிமக்களைத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினருக்கு, ‘ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா’ எனப்படும் ‘ஓசிஐ’ தகுதியை இந்தியா வழங்குகிறது.
இந்த நடைமுறையை 2005ஆம் ஆண்டு முதல் இந்தியா பின்பற்றிவருகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் இந்தியக் குடிமக்களை மணந்துகொண்டோரும் விசா இல்லாமல் இந்தியா செல்லுதல், அங்கு தங்கியிருத்தல், பணிபுரிதல், சொத்து வாங்குதல் உள்ளிட்ட சலுகைகளை இதன்மூலம் பெறுவர்.
அத்தகைய 100க்கு மேற்பட்டோரின் ‘ஓசிஐ’ தகுதியை, பிரதமர் மோடியின் அரசாங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரத்து செய்துள்ளது.
இந்தத் தகவலை ‘ஆர்ட்டிகிள்14’ செய்தி இணையத்தளத்திடம் 2023 ஜூனில் வெளியிட்ட இந்திய உள்துறை அமைச்சு, 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்கள் அந்த இணையவாசலில் இல்லை என்று தெரிவித்தது.
சுவீடனில் 33 ஆண்டுகளாகப் பணிபுரியும் பேராசிரியர் அஷோக் ஸ்வெயின், 59, ‘ஓசிஐ’ அட்டை வைத்திருந்ததால் ஓய்வுபெற்றபின் இந்தியாவின் புவனேஸ்வர் நகரில் வாழ்வைத் தொடரத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரது ‘ஓசிஐ’ தகுதி ரத்துசெய்யப்பட்டதால், நோய்வாய்ப்பட்டுள்ள 80 வயதுத் தாயாரைச் சென்று பார்க்கக்கூட அவரால் இயலவில்லை.
இந்திய அரசாங்கத்திற்கு எதிரான பதிவுகளை அவர் டுவிட்டரில் பதிவிட்டதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகெங்கும் இவரைப்போல கிட்டத்தட்ட 4.5 மில்லியன் பேர் ‘ஓசிஐ’ அட்டை வைத்துள்ளனர்.
அண்மையில், பிரெஞ்சு செய்தித்தாள்களுக்காக இந்தியாவில் பணிபுரிந்த திருவாட்டி வனேசா டோக்னகின் ‘ஓசிஐ’ தகுதி ரத்துசெய்யப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மற்றொரு வெளிநாட்டுச் செய்தியாளர், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘ஓசிஐ’ தகுதிபெற்ற செய்தியாளர்கள் தங்கள் செய்தியாளர் அனுமதி அட்டையை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டியிருப்பதாகக் கூறினார்.
குடியுரிமைச் சட்டத்தில் 2021ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்கீழ், ‘ஓசிஐ’ தகுதிபெற்றோர் இந்தியாவில் ஆய்வு செய்தல், செய்தி சேகரித்தல், மலையேறுதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.
‘ஓசிஐ’ தகுதிபெற்றோர் இந்தியாவின் இறையாண்மை, அரசமைப்புச் சட்டம், பாதுகாப்பு போன்றவை தொடர்பில் அதிருப்தி தெரிவித்தால் அவர்களின் ‘ஓசிஐ’ தகுதியை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசாங்கத்துக்கு உண்டு.