டாக்கா: பங்ளாதேஷ் எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசியவாத கட்சி, இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அவாமி லீக் கட்சியின் தலைவரும் பங்ளாதேஷ் பிரதமருமான ஷேக் ஹசீனா கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவுடன் நட்புறவைப் பாராட்டும் ஷேக் ஹசீனா, இந்தியாவின் மசாலாப் பொருட்களை புறக்கணிக்க முடியுமா, அவர்கள் தங்களுடைய மனைவிகள் அணியும் இந்திய புடவைகளை எரிக்க முடியுமா என்று எதிர்க்கட்சிகளை கேட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, “இந்திய தயாரிப்பு பொருள்களை எதிர்க்க வேண்டும் என சொல்பவர்களுக்கு என்னுடைய ஒரே கேள்வி, எவ்வளவு இந்திய சேலைகள் உங்களுடைய மனைவிகள் வைத்துள்ளார்கள். அந்தச் சேலைகளை ஏன் உங்கள் மனைவியிடம் இருந்து வாங்கி இன்னும் தீ வைத்து எரிக்காமல் உள்ளீர்கள் என்பதுதான்,” என்று கூறியுள்ளார்.
“மசாலாப்பொருள்கள், வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் அனைத்து வாசனை திரவியங்கள் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன. அவை அனைத்தும் பங்ளாதேஷ் தேசியவாத கட்சித் தலைவர்களின் வீட்டின் சமையலறையில் இருக்கக்கூடாது.
“பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர்கள், அவர்கள் மனைவியர் இந்தியாவிற்குச் சென்றபோது அங்கிருந்து சேலைகளை வாங்கி பங்ளாதேஷில் விற்பனை செய்தார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பங்ளாதேஷ் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதற்கு துணைசெய்ததாகவும் ஷேக் ஹசீனா பிரதமராவதை இந்தியா விரும்புவதாகவும் பங்ளாதேஷ் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.