லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், செருப்பு மாலை அணிந்தபடி பிரசாரம் மேற்கொள்ளும் காட்சி இணையத்தில் பரவலாகப் பரவி வருகிறது.
மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில், பண்டித் கேஷவ் தேவ் என்பவரும் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு ‘செருப்பை’ சின்னமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்நிலையில், 7 செருப்புகளை கோத்து மாலையாக அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த கேஷவ், பிரசாரத்தின் போதும் செருப்பு மாலையுடன் காணப்படுகிறார்.
மக்களை ஈர்ப்பதற்காகவும், சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காகவும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் செருப்பு மாலையுடன் நகர் முழுவதும் பிரசாரம் செய்யும் காட்சிகள் வாக்காளர்களின் கவனத்தை பெற்றதுடன் இணையத்திலும் பரவலாகி வருகின்றது.