மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் இருந்து 49 கி.மீ தொலைவில் மத்தியப் பிரதேச எல்லையின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது லாரியா டா என்ற கிராமம். இவர்கள் இங்குள்ள நீரூற்றில் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெற்று வந்தனர்.
தற்போது இங்கு மக்கள் தொகை அதிகரித்து விட்டது. ஊற்றில் சுரக்கும் நீர் கிராம மக்களின்தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.
கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக லாரிமூலம் இந்த கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனால் இந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியும் தண்ணீருக்கே செலவானது.
இதற்கு, முன்பு இங்கு ரூ.4.87 கோடியில் உருவாக்கப்பட்ட குடிநீர் திட்டம் பலனளிக்கவில்லை. இதனால் லாரியா டா கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின் ரூ.10கோடியில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
புவியியல் நிபுணர்கள், பனாரஸ் இந்து பல்லைக்கழக குழுவினர், ஜல் ஜீவன் திட்ட அதிகாரிகள், உ.பி குடிநீர் வாரிய அதிகாரிகள், நமாமி கங்கை திட்ட அதிகாரிகள் இணைந்து உருவாக்கிய குடிநீர் குழாய் திட்டம் தற்போது பலனளித்துள்ளது.