சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில் உள்ள பண்டிப்பூர், நாகரஹொளே, பிலிகிரிரங்கா, பத்ரா, காளி ஆகிய ஐந்து புலிகள் காப்பகங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ் ஐஎப்எஸ் அதிகாரியான ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட்டில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக புதுச்சேரியைச் சேர்ந்த ரமேஷ்குமார் 2022 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார்.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதலைத் தடுக்கவும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இவர் அயராது பாடுபட்டு வருகிறார்.
அத்துடன் வனத்தையும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இவர் அறிமுகப்படுத்திய ‘பண்டிப்பூர் யுவ மித்ரா’ விழிப்புணர்வுத் திட்டத்தின்கீழ் கடந்த 162 நாட்களில் 8,410 பேர் பங்கேற்றுள்ளனர்.
இத்திட்டம் தற்போது இந்தியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் ரமேஷ்குமாரிடம் இரு நாள்களுக்கு முன்பு பண்டிப்பூரில் வழங்கப்பட்டது.
நாட்டின் 50வது புலிகள் பாதுகாப்புத் திட்ட விழாவை ஒட்டி, பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு கடந்தாண்டு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ரமேஷ் குமாரின் பணியைப் பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.