பனாஜி: கோவில்களின் புனிதத்தைக் காக்கும்பொருட்டு, இந்தியாவின் கோவா மாநிலம், போண்டா (Ponda) நகரின் பெரும்பாலான கோவில்களில் வரும் புத்தாண்டு நாள் முதல் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
கோவில் நகரமாக அறியப்படும் போண்டாவில் அரைக்கால் சட்டை, அரைக்கால் பாவாடைகள், கையில்லா மேலாடைகள் போன்ற உடலை முழுமையாக மறைக்காத ஆடைகளை அணிந்துகொண்டு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
அத்தகைய ஆடைகளை அணிந்து வருவோர்க்கு உடலை முழுமையாக மறைக்கும் வண்ணம் ‘உபர்னே’ எனும் மேலாடையும் ‘லுங்கி’யும் வழங்கப்படும்.
இதுபோன்ற நடைமுறை சிங்கப்பூரின் பல இந்துக் கோவில்களில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆடைக் கட்டுப்பாடு தொடர்பில் ஏற்கெனவே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ராமநாத தேவஸ்தானத்தின் தலைவர் வல்லப் கங்கோலியங்கர் கூறினார்.
சுற்றுப்பயணிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதே இதன் நோக்கம் என்றார் அவர்.
“பெரும்பாலான நேரங்களில் சுற்றுப்பயணிகள் முறையாக ஆடை அணிவதில்லை. அதனால், கோவிலின் புனிதத்தைக் காக்கும் நோக்குடன், ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது எனப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது,” என்று அவர் சொன்னார்.
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஆடைக் கட்டுப்பாடு பொருந்தாது.
ஸ்ரீ மங்குவேஷ் தேவஸ்தானமும் புத்தாண்டிலிருந்து ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவுசெய்துள்ளது.
“ஆடை அலங்கார அணிவகுப்பிற்கோ கண்காட்சிக்கோ கோவில் இடமன்று. அது வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் உரிய இடம்,” என்றார் அந்தத் தேவஸ்தானத்தின் தலைவர் அஜித் கந்தக்.