பார்ப்பதற்கு இறைச்சித் துண்டு போல் இருக்கும். வெட்டினால் அதனிடமிருந்து ரத்தமும் வழியும். ஆனால் அது முற்றிலும் தாவரப் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள 'ரெட்வூட்' நகரில் உயிரியல் ரசாயன விஞ்ஞானி ஒருவர், கிட்டத்தட்ட 100 விஞ்ஞானிகளின் உதவியுடன் இந்த செயற்கை இறைச்சியைத் தயாரித்துள்ளார். 'இம்பாசிபள் பூட்ஸ்' உணவு நிறுவனம் ஏழு உணவகங்களுடன் பங்காளித்துவத்தில் இணைந்து அந்த 'இறைச்சி' பொருளை சிங்கப்பூரில் விற்க தொடங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்த உணவுப்பொருளை விற்க ஆரம்பித்தது. அங்கு தற்போது 5,000க்கும் அதிகமான உணவகங்கள் இறைச்சியை விற்று வருகின்றன. 2018ஆம் ஆண்டில் அது ஹாங்காங் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த 'மாமிசம்' ஹாங்காங்கிலுள்ள 150க்கும் அதிகமான உணவுக்கடைகளில் விற்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள் அறிமுகம் காணும் மூன்றாவது சந்தையாக சிங்கப்பூர் உள்ளது.
உணவுக்காக விலங்குகளை வளர்ப்பதால் ஏற்படும் சுற்றுப்புற மாசைக் குறைக்க இந்த முயற்சி தொடங்கப்பட்டதாக 'இம்பாசிபள் பூட்ஸ்' உணவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
இந்தப் பொருள் தொடக்கத்தில் கோதுமை, கிழங்கு ஆகியவற்றால் செய்யப்பட்டவை. பின்னர், சோயா சத்து கொண்ட மற்றொரு வடிவ இறைச்சியை அந்நிறுவனம் இவ்வாண்டு ஜனவரி வெளியிட்டது.