லிட்டில் இந்தியாவிற்கு பொலிவு கூட்டும் சுவரோவியப் படைப்புகளில் நான்கு புதிய சுவரோவியங்கள் இவ்வாண்டு இணைந்துள்ளன.
அவற்றில் மூன்று ஓவியங்கள், ஃபீனிக்ஸ் பறவைகள், சந்திரவாசிகள், பச்சைக்கிளிகள் முதலிய பல வண்ணப் பறவைகளைச் சித்திரிப்பவையாக அமைந்துள்ளன.
குறிப்பாக, லிட்டில் இந்தியா வட்டாரத்தின் தனித்தன்மையைப் பறைசாற்றும் விதத்தில் இந்தச் சுவரோவியங்கள் சிங்கப்பூர் கலை விழா 2022ன் ஓர் அங்கமான ‘ஆர்ட் வாக்’ முயற்சியை முன்னிட்டுப் படைக்கப்பட்டுள்ளன.
ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘ஆர்ட் வாக்’, இம்முறை லிட்டில் இந்தியாவைத் தாண்டி, காத்தோங், ஜூ சியாட் பகுதிகளிலும் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. சுவரோவியங்களுடன் படைப்பாளர் காமினி ராமசந்திரன் வழிநடத்தும் சுற்றுலா, நடனமணி ஐஸ்வர்யா ஜெயக்குமாரின் நடனப் பயிலரங்கு முதலிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பல்லுணர்வுத்தன்மை கொண்ட ஒரு கலை அனுபவத்தை ‘ஆர்ட் வாக்’ இம்முறை வழங்கியது.