கவலையின்றி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உலகில் பலர் ஆவலாகக் காத்திருக்கின்றனர். கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கி சுமார் ஈராண்டுகள் ஆகிவிட்டன. இதனால் அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்தது, வேலையை இழப்பது, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்களைப் பலர் எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சிக்கலான சூழலை இந்தத் தலைமுறையில் பலர் பார்த்திருக்கமாட்டார்கள்.
இத்தனை சவால்களைக் கையாள்வதே பலருக்கு நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. ஆனால் இப்படிப்பட்ட சூழலில் எந்தக் காலத்துக்கும் கைகொடுக்கும் ஓர் அம்சத்தை வளர்த்துக்கொள்ளலாம். அதுதான் மனவுறுதி.
இவ்வளவு பெரிய நெருக்கடிக்குப் பிறகு முன்பிருந்ததைப்போல் வாழ்க்கை இனி இருக்காது என்கிறார் குடும்பநல ஆலோசகர், கல்வியாளர், ஆய்வாயர் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் 87 வயது டாக்டர் பாஸ். இரண்டாம் உலகப் போரையும் பார்த்த இவர், வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை வலியுறுத்துகிறார்.
மாற்றங்களுக்கு ஏற்றவாறு மனிதர்கள் மாறாவிட்டால் நாம் வளர்ச்சியடையப் போவதில்லை என்று இவர் சொல்கிறார்.
வேதனை தரும் நிகழ்வுகளுக்கு மத்தியில் நமது மனவுறுதியை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்பு அமைகிறது என்று டாக்டர் பாஸ் கூறுகிறார்.
இத்தகைய குணாதிசயங்கள் பொதுவாக ஒருவருக்குப் பிறவியிலேயே இருக்கவேண்டும் எனப் பலர் கருதுவதுண்டு. ஆனால் எந்த வயதிலும் பல்வேறு குணாதிசயங்கள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றைப் பின்பற்றமுடியும் என்பது இவர் கருத்து. மனவுறுதியை வளர்த்துக்கொள்ளத் தமது புதிய புத்தகத்தில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கொவிட்-19 கிருமிக்குப் பலியோனோரின் நெருக்கமானவர்களும் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்து மனத்திற்கு ஆறுதல் தேடுவதுடன் புது நம்பிக்கையுடன் வாழலாம். உதாரணமாக, நோய்க்குப் பலியான ஒருவரின் உறவினர்கள் அந்த நோயால் அவதிப்படும் மேலும் பலருக்கு உதவிக்கரம் நீட்டலாம்.
இந்தக் காலகட்டத்தில் உற்சாகத்துடன் இருப்பது சவாலான ஒன்றுதான். ஆனால் அதையும் மீறி நம்பிக்கையை இழக்காமல் சூழலுக்கேற்ப மாறிக்கொண்டால் இதுவும் கடந்து போய்விடும்.