உலகின் மிக நீடித்த நிலைத்தன்மை மிக்க சமுதாயங்களில் ஒன்றாக ஜப்பான் மாறியதற்கும் அதன் பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலை இலக்கியம், தனித்துவமான வளர்ச்சி ஆகியவற்றுக்கும் 400 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் எடுக்கப்பட்ட கொள்கைதான் காரணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
'இடோ' என்று அழைக்கப்படும் ஆட்சியின் கீழ், பல நூறாண்டுகால உள்நாட்டுப் போர்களுக்குப் பிறகு அப்போதுதான் ஜப்பான் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது.
பசி, பஞ்சம், காடுகளின் அழிப்பு, அளவுக்கு அதிகமான மக்கள் தொகை, வேளாண்மையில் சரிவு என்று பல பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியது.
கடந்த 1603ஆம் ஆண்டு முதல் 1863 வரை ஜப்பான் மேற்கத்தியரின் வருகையைத் தடுக்க அதன் எல்லைகளை மூடி, வெளிநாட்டினரை உள்ளே அனுமதிக்கவில்லை.
அந்த சுமார் முந்நூறு ஆண்டுகளில் இயற்கைப் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கக் கொள்கைகள் பெருமளவில் மாறின.
இடோ ஆட்சியில், மரங்கள் வளர்க்கப்பட்டு காடுகள் உருவாக்கப்பட்டன. மன்னர்கள் தண்ணீரின் தரத்தை மேம்படுத்தினர்.
வெளிநாட்டுப் பொருள்கள் கிடைக்காததால், நாட்டில் இருந்த பொருள்களை வைத்து உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஜப்பானில் மறுபயனீடு செய்யும் கலாசாரம் வளர்ந்தது.
இடோ காலகட்டத்தில் மக்கள் பரபரப்பற்ற, அமைதியான வாழ்க்கை முறையைப் பின்பற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
எரிசக்தி, உணவு, வளங்கள் ஆகியவற்றுக்கான தேவையை ஜப்பான் தானே நிறைவேற்றிக்கொண்டது. படிம எரிபொருள்களும் ரசாயன உரங்களும் இல்லாத பொருளியல் அங்கு இயங்கியது.
பொருள்களைப் பாதுகாப்பதையும் முடிந்தவரை குறைவானவற்றை வீணடிப்பதையும் ஜப்பானியர்கள் பழக்கமாக்கிக் கொண்டனர்.
மக்கள் ஆடைகள் கந்தலாகும்வரை அவற்றை மீண்டும் மீண்டும் தைத்து அணிந்துகொண்டனர்.
எல்லாம் மறுபயனீடு செய்யப்பட்டது. வீடுகளைப் பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் அமைக்கும் தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்பட்டது.
மனிதக் கழிவுகளும் உடல்களை எரித்த சாம்பலும் உரங்களாகப் பயன்பட்டன. இது மற்ற சமூகங்களில் காணப்பட்டாலும், தொழில்முனைப்பு மிக்க ஜப்பானியர்கள் இதை வர்த்தகமாக மாற்றினர். கழிவுகளையும் சாம்பலையும் விற்கும் தொழில் தழைத்தது.
இதனால் வேளாண்மை பெருகியது. கழிவுகள் குறைந்ததால் சுத்தமும் சுகாதாரமும் பெருகியது. மக்களின் வாழ்க்கை செழிப்பானது.
பருத்தி, எண்ணெய், காகிதம் போன்றவற்றின் உற்பத்தி, பட்டுப் புழுக்களை வளர்த்தல் போன்ற உள்ளூர் தொழில்கள் வளர்ந்து ஜப்பானுக்கு இன்றும் தனித்த அடையாளத்தைத் தருகின்றன.
இடோ காலத்தில் நேரத்தைப் பிரித்து கணக்கிடும் முறை மாற்றப்பட்டது. கதிரவன் தோன்றியதும் வேலைகளைத் தொடங்கி அது மறைந்ததும் அவற்றை முடித்துக் கொண்டனர்.
ஆலய மணி அடிப்பதை வைத்து மக்கள் நேரத்தைக் கணித்தனர்.
இதனால் தமிழர்களைப் போல பருவகாலங்களுக்கு ஏற்ற வாழ்க்கையும் அதற்கேற்ற பண்பாடும் பழக்கவழக்கங்களும் உருவாயின.
கட்டாயத்தால் உண்டான பண்டைய முறையில் பல குறைபாடுகள் இருந்தன. ஆனாலும் இந்த மறுபயனீட்டு வாழ்க்கை முறையிலிருந்து உலகம் இன்று நாம் பாடம் கற்று ஒழுக வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.