கருணாநிதி துர்கா
உலக நாடுகள் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு சுற்றுப்பயணத் துறை மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆனால் பயண அனுபவங்களில் மாற்றங்களைக் காணமுடிவதாகக் கூறுகின்றனர் சுற்றுப்பயணிகள்.
தொற்றுநோய்க்கு முன்னர் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்தவர் பாஸ்கரன் ஜெயசுபஸ்ரீ. அண்மையில் இவர் இந்தோனீசியாவுக்கும் இந்தியாவிற்கும் சென்றுவந்தார்.
சுற்றுலாத் தலங்களில் கூட்டம் குறைந்திருப்பதாகக் கூறிய இவர் சுற்றுப்பயணிகள் மூலமாக தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சம் அங்குள்ள மக்களிடையே பரவலாக இருக்கிறது என்கிறார். பயணச்சீட்டுகளின் விலை உயர்ந்திருப்பதை இவர் குறிப்பிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுக்குச் செல்வதிலும் இந்திய உணவு வகைகளைச் சுவைத்துப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் மதுமிதா திருப்பதி, இந்தியாவின் மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்றுவந்தார்.
நோய்ப் பரவலுக்கு முன்னும் பின்னும் இந்தியா சென்ற இவர் பெரிதாக எந்த மாற்றத்தையும் காணவில்லை என்றார். ஆறு மாதங்களுக்கு முன்னரே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ததால் கூடுதல் செலவு இல்லை.
இருப்பினும் கோலாலம்பூர் சென்றபோது தடுப்பூசி விவரங்களைப் பதிவுசெய்யும் முறை பயணிகளுக்குக் குழப்பமாக இருந்ததை உணர முடிந்ததாகக் கூறினார் இவர்.
பயணம் செய்வதில் ஆர்வம்கொண்ட தி. சக்தி நிவாஸ், நோய்ப் பரவலுக்குமுன் கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள், துபாய், சீனா போன்றவற்றுக்குப் பயணம் செய்ததுண்டு.
கடந்த ஈராண்டுகளில் தென்கொரியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகியவற்றுக்குச் சென்றதுடன் நெடுந்தொலைவு நடைப்பயணங்களும் மேற்கொண்டார்.
தென்கொரியா போன்ற நாடுகளில் மொழி ஒரு தடையாக அமைந்ததால் அங்குள்ளவர்களிடம் பெரும்பாலும் மொழிபெயர்ப்புச் செயலிகள் மூலம் உரையாடினார். பயணக் காப்பீடு, சுகாதாரப் பரிசோதனை ஆகியவற்றுக்கு அதிகம் செலவானதாகக் கூறினார்.
அண்மையில் பயணக் காப்புறுதி வாங்குவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 25 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக நிதி ஆலோசகர் ஹபிடா ஷா கூறினார்.
கிருமிப் பரவலுக்கு முன்பு பல நாடுகளுக்குப் பயணம் சென்ற அனுபவம் கவிலாஷா குமாரசாமிக்கு உண்டு. அதே நாடுகளில் தற்போது முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் போன்ற விதிமுறைகள் நடப்பில் இருப்பதை இவர் சுட்டினார்.
அண்மையில் மலேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கும் சென்ற இவர் வெளிநாட்டுப் பயணங்களின்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும் எனப் பெரிதும் அஞ்சியதாகச் சொன்னார்.
நோய்ப் பரவலுக்குப் பின்னர் தனியாக லண்டன் சென்ற அலீனா சஜனுக்கும் அச்சம் இருந்தது. அங்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. இருப்பினும், நோய்ப் பரவலுக்குப் பின் சுகாதாரத்திற்கும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றார் இவர்.
கூடிய விரைவில் இந்தியா செல்லவிருக்கும் மஹிமா இளங்கோ, இனி தொற்றுநோய் அறிகுறிக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்்.