கம்பீரமான நாதஸ்வர இசைக்கு நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடி பெரும் புகழ்பெற்ற படம் தில்லானா மோகனாம்பாள். நாதஸ்வர இசைமேதைகளான எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என்.பொன்னுசாமி சகோகரர்களின் நாதஸ்வர இசையில் பத்மிதி ஆடிய நடன இன்றும் பலராலும் ரசிக்கப்படுவது.
பாடல்களின்றி நாதஸ்வர இசைக்கு பரதநாட்டியம் ஆடுவது பார்வையாளருக்கும் படைப்பவர்களுக்கும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்று கூறினர் அத்தகைய நிகழ்ச்சியான ‘மல்லாரி’யை வழங்கிய கலைஞர்கள்.நான்கு கலை அமைப்புகள் ஒன்றிணைந்து வழங்கிய ‘மல்லாரி’ நிகழ்ச்சி, கடந்த வெள்ளிக்கிழமை 4ஆம் தேதியன்று நடைபெற்றது.
தமிழர்களின் ‘கொம்பு’ இசைக்கருவியிலிருந்து பரிணமித்த நாதஸ்வரம், தென்னிந்தியாவில் பரவி ஆலயங்களிலும் அரசவைகளிலும் முக்கிய இசையாகி, வளர்ந்து மிக உயர்ந்த நிலையில் மதிக்கப்படுவதாக நிகழ்ச்சியைத் தயாரித்த கல்பவிருக்ஷா கலை அமைப்பின் கலை இயக்குநர் மீரா பாலசுப்ரமணியம் கூறினார்.
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம் போன்ற நாதஸ்வர இசை மேதைகள் கோலோச்சிய காலத்தில் மக்கள் நாதஸ்வர கச்சேரிகளை மூன்று, நான்கு மணி நேரம் அமர்ந்து கேட்டு ரசித்ததை திருவாட்டி மீரா சுட்டினார்.
“இவர்களால் பேணப்பட்ட உன்னதமான இந்த நாதஸ்வரக் கலையின் கதையை எடுத்துக்கூறும் நாட்டிய நிகழ்ச்சியை உருவாக்க விரும்பினோம்,” என்று திருவாட்டி மீரா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
ஆலயம், அரசவை, திரைத்துறை, பல பாணிக் கலவை (fusion) என நிகழ்ச்சி நான்கு அங்கங்களைக் கொண்டிருந்தது. கல்பவிருக்ஷா கலை அமைப்பைச் சேர்ந்த பன்னிரண்டு நடனமணிகள், ஆசிரியர் அக்ஷயா ஸ்ரீகுமாரியின் நடன அமைப்பில் முதல் அங்கத்தைப் படைத்தனர்.
இரண்டாவது அங்கத்தில் மேதஸ்வி கலை நடனப்பள்ளியின் ஹரிதா ஹரிதாஸ் வழிகாட்டலில் 8 நடனமணிகளும் மூன்றாவது அங்கத்தில் ஆசிரியர் ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலில் 12 நடனமணிகளும் ஆடினர்.
நிகழ்ச்சியின் இறுதி அங்கத்தில் நாஃபா கலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான ‘பேலே’ (ballet) கலைஞர்கள் மூவரின் நடனமும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் நாதஸ்வரம் வாசித்த கேரளக் கலைஞர் ஓ.கே.கோபி, 64, வாய்ப்பாட்டு இன்றி, நாதஸ்வரத்தை நடுநாயகமாக வாசித்தது மாறுபட்ட அனுபவம் என்றார். எஸ்பிபி, வித்யாசாகர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு வாசித்துள்ள திரு கோபி, இது தாம் வாசித்த மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இது சற்று சவாலாக இருந்ததாகக் கூறினார்.
மிருதங்கம், தவில் வாசித்த ஸ்ரீகாந்த் - ஸ்ரீராம் சகோதரர்கள், வாத்திய இசைக்கு முக்கியத்துவம் அளித்த இந்த மாறுபட்ட நடன நிகழ்ச்சியில் வாசித்தது சவாலாக இருந்தபோதும் இந்த அனுபவம் மனநிறைவாக இருந்ததாகக் கூறினர்.