ராடின் மாஸ் தொகுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு தீபாவளி உற்சாகம் இன்னும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நவம்பர் மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை இரவு ‘ஜொலிக்கும் தீபாவளி’ என்னும் தீபாவளி கலை நிகழ்ச்சி ராடின் மாஸ் சமூக மன்றத்தில் களைகட்டியது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் மக்களுக்கு இந்திய கலாசாரத்தை ஒட்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டது.
குடும்பங்கள் ஒன்றிணைந்து தீபங்களுக்கு வண்ணம் தீட்டுவது, இளம்பருவத்தை நினைவுகூரும் வகையில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது, அதிலிருந்து களைப்பாற பானிபூரி சாப்பிடுவது, அனைத்து வயதினரும் அனுபவித்து பார்க்கும் விதத்தில் புதுமையான ‘ஏர்பிரஷ்’ பச்சை குத்துவது எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதுவரை நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சிகளில், இவ்வாண்டின் ஜொலிக்கும் தீபாவளி நிகழ்வில் புதிதாக பாரம்பரியக் கூறுகளை தழுவிய அங்கங்கள் சேர்க்கப்பட்டன.
வழக்கம்போல, தீபாவளி சமூக நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல் அம்சங்கள் பல அரங்கேறினாலும் இம்முறை சிறிய நகைச்சுவை நாடகத் தொகுப்பும் இடம்பெற்றது.
அதில் கிருஷ்ணன்போல வேடமிட்ட இளையர் ஒருவர், வயதான மூதாட்டி ஒருவருக்கு ஆடல், பாடல் மூலம் அவர் கேட்கும் வரங்களை வழங்குவதுபோல காட்சியிடப்பட்டது.
வானொலிப் படைப்பாளர் விமலாவும், ஊடகத் துறையில் இருக்கும் பரிமளாவும் நெறியாளர்களாக நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
பிரபல பாடகர் பரசு கல்யாண் தம் இசைக்குழுவுடன் பல பாடல்களைப் பாடி மக்களை குதூகலத்தில் ஆழ்த்தினார்.
ஓம்கார் நடனக்குழுவைச் சேர்ந்த நடனமணிகள் தங்களின் ஒத்திசைக்கப்பட்ட நடன அசைவுகளால் நிகழ்ச்சியில் அசத்தினர்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியும் ராடின் மாஸ் தனித்தொகுதியும் கைகோத்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கும், ராடின் மாஸ் தனித்தொகுதிக்குமான அடித்தள ஆலோசகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குவீன்ஸ்டவுன் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ரஞ்சனி ரங்கன், இவ்வாண்டின் ஜொலிக்கும் தீபாவளி நிகழ்ச்சியில் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
நிகழ்ச்சியைப் பற்றி தம் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், “இவ்வாண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு எனக்குக் கிடைத்தபோது நான் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன். அவ்வகையில், நாடகத் தொகுப்பு நிகழ்வில் இடம்பெற்றது. பார்வையாளர்கள் இசையில் மகிழ்ந்ததோடு நாடகத்தையும் ரசித்தார்கள்.” என்றார்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை பார்வையிட வந்த கிட்டத்தட்ட 400 பேரில் ஒருவரான நிவேதா வினோத், 34, தம் குடும்பத்தோடு வந்திருந்தார்.
மென்பொருள் பொறியாளரான நிவேதா, “முதன்முறையாக நான் இதுபோன்ற கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். பிள்ளைகள் வீட்டில் இருப்பதற்கு அவர்களை இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அழைத்து வருவதால் பலவற்றை அறிந்துகொள்வார்கள்,” என்று சொன்னார்.
மற்றொருவரான அமீதா பீவி, 63, “நான் ஒவ்வோர் ஆண்டும் இந்த தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன். கொவிட்-19 பரவலுக்குப் பிறகு இடம்பெற்ற இந்நிகழ்ச்சி மேலும் நன்றாக அரங்கேறியது,” என்று சொன்னார்.