அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ‘ஜென் ஏபிள்டு’ எனும் மேகக் கணினிச் செயல்பாடுகள் குறித்த மின்னிலக்கப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திறன்சார் கல்வியை ஊக்குவிக்கும் அனைத்துலக அமைப்பான ‘ஜெனரேஷன் சிங்கப்பூர்’ உருவாக்கியுள்ள இத்திட்டம், மின்னிலக்கப் பொருளியலில் முன்னணியில் இருக்கும் தொழில்நுட்பப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
தொழில்முனைவோர், பின்தங்கிய பெண்கள் உள்ளிட்டவர்களுக்கும் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பை இத்திட்டம் ஏற்படுத்தும்.
இதன்கீழ், வரும் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள முதல் மூன்று மாதப் பயிற்சி முகாம், ‘கிளவுட் டெவலப்மென்ட் ஆபரேஷன்ஸ்’ எனும் தொழில்நுட்பத் துறையில் தொடக்கநிலைப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளை அமர்த்த உதவும்.
கற்றல் சூழலும் ஆதரவும்
குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லாத நபர்களைப் பயிற்றுவிக்கவும், திறன் அடிப்படையில் பணியமர்த்தவும் கவனம் செலுத்துகிறது இத்திட்டம்.
பொருளியல் அடிப்படையிலான ஆதரவிற்காக 95 விழுக்காடு வரை நிதியுதவி அளிக்கப்படும். இதற்கான நிதியை ‘எனேபிளிங் அகாடமி’, ‘எஸ்ஜி எனேபிளிங்’ மாற்றுத்திறனாளிகளுக்கான கற்றல் மையம் இணைந்து வழங்குகின்றன.
கூடுதலாக முன்னாள் மாணவர் குழுவிலிருந்து தொழில்நுட்பத் துறை வல்லுநர்களின் தொழில்முறை ஆதரவும் கிட்டும். ‘ஈகிள்ஸ்’ ஆலோசனை மையத்தின் சேவைகளுக்கும் இத்திட்டம் மூலம் மானியம் அளிக்கப்படும்.
எந்தப் பின்னணி அல்லது சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், அனைத்துப் பயனர்களையும் உள்ளடக்கும் இத்திட்டம், பன்முகத்தன்மையின் வெளிப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.