கலாசாரத்தின் புரிந்துணர்வில் அடங்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று உணவு. நூலகங்களிலும் புத்தகங்களிலும் இல்லாத கதைகளை நாம் சுவைத்து ரசிக்கும் உணவினில் காணலாம். கலாசாரத்தின் புரிந்துணர்வு எப்படி நாம் உண்ணும் உணவில் உள்ளது என அறிந்துகொள்வோம்.
சமூகப் பிணைப்பை உருவாக்கும் உணவு
அடிப்படை ஊட்டச்சத்தைத் தாண்டி, உணவு ஒரு சமூகத்தின் பிணைப்பை உருவாக்கி வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணவையும் உண்ணும் பழக்கங்களையும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைந்து பழகக் கற்றுக்கொள்வதுண்டு.
குடும்பமாகச் சேர்ந்து உண்ணுதல், அந்த நாளில் ஒரு மிக முக்கியமான பொழுதாக அமைகிறது. ஒன்றுகூடி கதைகளையும் உணவையும் பகிர்ந்துகொள்வது உறவுகளை வலுப்படுத்துகிறது. மேலும், உலக மதங்களின் சில முக்கியமான சடங்குகளும் நடைமுறைகளும், சில உணவுகளை உட்கொள்வது அல்லது கைவிடுவதை மையமாகக் கொண்டுள்ளன.
ஒருவருக்கொருவர் ஆழமான, அர்த்தமுள்ள உறவுகளை உணவின் மூலம் உருவாக்குகிறோம். உணவு, சமூகப் பிணைப்புக்கும் நல்வாழ்வுக்கும் முக்கியம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்றைய உலகில் உணவின் அடையாளத்தைப் பற்றிய இந்த விழிப்புணர்வை நாம் ஓரளவு இழந்துவிட்டோம்.
நமது தேவைகள் மீதான கவனம் அதிகரித்து வருவதால், நாம் அடிக்கடி தனித்தே சாப்பிடுகிறோம். சில சமயங்களில் கவனம் உணவின் மேல் இல்லாமல் போகும் சூழ்நிலையும் உருவாகிறது.
வாரநாள் மாலை நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தனித்தனியாகச் சாப்பிடுகிறார்கள். மேலும், சராசரியாக ஒவ்வொரு வாரமும் 21 உணவு வேளைகளில் 10 வேளை தனித்து சாப்பிடுகிறார்கள் என்று ஆய்வு குறிப்பிடுகிறது.
நமது சமூகம் மெதுவாக தனிமை அடைந்து வருவதை இது உணர்த்துகிறது.
கலாசாரத்தை உணர்த்தும் உணவு
சமூகப் பிணைப்பை உருவாக்க உணவு பயன்படுத்தப்பட்டதால், அதிலிருந்து விளைந்தது வெவ்வேறு உன்னதமான கலாசாரங்கள். ஒரு தேசத்தையும் அதனுடைய மக்களையும் உணவின் மூலம் அறிந்து கொள்ளலாம் - உணவு அதன் கலாசாரக் கட்டமைப்பாக திகழ்கிறது.
நாம் சாப்பிடும் தனித்தன்மையான வழிகளில் கலாசாரக் கதைகளைப் புரிந்துகொள்ளலாம். இந்தியர்கள் பெரும்பாலோர் தங்களது கைகளைப் பயன்படுத்தி சாப்பிடுவார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்தக் கலாசாரம் சற்று அரிது.
ஜப்பானில், தட்டில் உணவை முடிப்பது மரியாதைக்குரிய ஒரு செயல். ஆனால் சீனாவில் இதைக் கடைப்பிடித்தால், போதுமான அளவு உணவு அளிக்கப்படவில்லை என்று கருதப்படுகிறது. உணவும், அதை உண்ணும் விதமும் வெவ்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கின்றன. மனிதர்கள் இடம்பெயர்ந்து உலகின் பல எல்லைகளைத் தாண்டி பயணிக்கும்போது, கலாசாரங்கள் ஒன்றிணைந்து புதிய உணவுக் கலாசாரங்கள் பிறக்கின்றன.
கலாசார அடையாளங்களில் உணவின் பங்கு
உணவு நமது கலாசாரங்களைப் பிரதிபலிப்பதால், அவை நமது அடையாளங்களின் முக்கியப் பகுதிகளாக மாறுகின்றன. சமையல் குறிப்புகள் தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை நம் முன்னோர்கள் விதைத்த பாரம்பரியத்துடன் நம்மைப் பெரிதும் இணைக்கின்றன. பிறந்து வளர்ந்த வீடுகளிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் பலருக்கும் இது முக்கியமான ஒன்று என்றால் அது மிகையாகாது.
நாம் யார், எங்கிருந்து வருகிறோம், நமது கலாசாரங்களின் வரலாறு போன்றவற்றை எடுத்துரைக்கும் ஆற்றல் உணவுக்கு உள்ளது. உணவு என்பது கலாசார வெளிப்பாட்டின் அடையாளமாக இருப்பதால், அது மனித இயல்பின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கிறது.
உணவின் மூலம் உலகப் பயணம்
ஆம், உணவின் மூலம் ஒருவர் உலகை நன்கு சுற்றிப் பார்க்கலாம்! அரும்பொருளகத்தில் பல வரலாற்று நினைவுச்சின்னங்களைப் பார்ப்பதுபோல், உணவை ஒரு மையமாக வைத்து பற்பல நாடுகளுக்கு நாவின் நற்சுவை துணையுடன் செல்லலாம்.
உணவுத் தயாரிப்பு உத்திகள், பொருள்கள், உணவு சார்ந்த நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு கலாசாரங்களைப் பற்றிய ஆழ்ந்த புரிதலைப் பெறலாம்.