“அம்மா எவ்வளவு நேரம்தான் இப்படி அழுதுகிட்டே இருப்பீங்க? நேத்து சாயந்தரம் சாப்பிட்டது. ஒரு சேன்விச்சாவது வாங்குறேன்,” என்று கண்களை மூடிக்கொண்டிருந்த தங்கத்திடம் மெதுவாகச் சொல்லிப் பார்த்தான் வேலன். அவர் உறங்கவில்லை என்று அவனுக்குத் தெரியும்.
“அவரு உங்களுக்கு புருஷனா வும் இருக்கல்ல, எனக்கு அப்பாவாவும் ஒண்ணும் செய்யல. எத்தனை நாள் பட்டினி கிடந்திருப்போம். எதிர்காலத்த நினெச்சி எவ்வளவு தவிச்சிருப்போம்! கடைசியில சிபிஎஃப் காசயும் எடுத்துகிட்டு ஊருக்குப் போனாரே! அந்த ஆளுக்காக நீங்க இப்படி உங்க உடல ஏன் வருத்திக்கிறீங்க?”
கண்களைத் திறந்து வேலனைப் பார்த்தார் தங்கம். ஒரு வினாடி அனல் தெறித்து தணிந்தது. உனக்கு புரியாது. எனக்குன்னு அடையாளமா இருந்தவரு அவருதான். இனிமே எனக்கு அந்த அடையாளம் இல்ல!” சொல்லும் பொழுதே அவரது கண்கள் பனித்தன. முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களை மீண்டும் மூடிக்கொண்டார்.
“தங்கம்! நான் ஒண்ணு சொல்லு வேன் கேட்பியா? அக்காவுக்கு பிள்ளை இல்லாததால, மாமாவுக்கு பொண்ணு பார்க்குறாக. வேற ஒரு பொண்ணு வந்தா, அவளுக்கு புள்ள குட்டீன்னு ஆனுச்சின்னா அப்புறம் நம்ம அக்காவ ஒதுக்கி வச்சுடுவாக. உன் அண்ணன் வேற படிச்சி கிட்டு இருக்கான். நம்மள, முக்கியமா உன் அக்கா வாழ்க்கையை உன்னாலதான் காப்பாத்த முடியும் ஆயி,” என்று பின்வாசல் படியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த அவளது காலருகில் அமர்ந்து தரையைப் பார்த்தவாறே கண்ணீர்விட்டபடி அம்மா சொன்னபோது தங்கத்துக்கு 15 வயது.
தங்கத்தின் அப்பாவுக்கு சிலோன் சம்பாத்தியம். குடும்பம் செழிப்பாகவே இருந்தது. திடீரென்று அவர் சேர்த்த சொத்து அனைத்தும் கொள்ளைபோனதோ அபகரிக்கப்பட்டதோ தெரியவில்லை. ஏமாற்றம் தாளமுடியாமல் மதியிழந்த நிலையில் தாயகம் திரும்பியவர் சிறிது காலத்தில் இறந்துவிட்டார். மாமா சிங்கப்பூரில் இருந்தார். அப்பாவின் சாவுக்கு வந்தபோது உறவுகள் சேர்ந்து அக்காவை அவருக்குக் கல்யாணம் பண்ணி வைத்தன. அப்பாவுக்குப் பிறகு மாமாதான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார்.
“தங்கம்... நீதாம்மா உங்க மாமாவைக் கட்டிக்கணும். வேற யாரு வந்தாலும் உங்க அக்கா கதி அதோகதிதான், நீயின்னா, அக்காவுக்கு ஒத்தாசையா இருப்பே, சண்டை சச்சரவு இல்லாம இருக்கும், மாமாவும் தொடர்ந்து நம்மள கவனிச்சிக்கிருவாரு.”
அக்காவுக்குத் தாலி கட்டும்போது மாமாவின் மடியில்தான் உட்காருவேன் என்று அடம்பிடித்ததால் தங்கத்தை மடியில் வைத்துக் கொண்டே தாலிகட்டினார் மாமா. தங்கத்துக்கு முதலில் நினைவுக்கு வந்தது கலங்கலான அந்தக் காட்சி தான். அந்த மாமாவை நான் கல்யாணம் செய்வதா, என் படிப்பு, டீச்சர் ஆவது...
தங்கத்தை யோசிக்கவிடாமல் அம்மா தொடர்ந்தார். “இதுதான் உன் அக்காளின் விருப்பமும்கூட. இத நீ செய்யலேன்னா அப்பறம் நாம குடும்பத்தோட குளத்திலேயோ, தண்டவாளத்துலேயோ போய் விழவேண்டியதுதான்.”
“அப்பாயி! அப்பாயி! இந்தாங்க சாப்பிடுங்க! சாப்பிடுங்க அப்பாயி!” பேத்தியின் மழலைக் குரலில் நினைவுகளிலிருந்து மீண்ட தங்கம், பேத்தி நிலா நீட்டிய பிஸ்கட்டை வாங்கிக்கொண்டார். “சாப்பிடுங்க அப்பாயி” என்று கையை எடுத்து வாயருகே வைக்கும் நாலு வயது குழந்தையிடம் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
மணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வேலன் பிறந்தபோது ஊருக்கு வந்திருந்த அப்பா, தங்கத்தையும் வேலனையும் தம்மோடு சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார்.
வீராசாமி ரோட்டிலிருந்த பல அறைகள் கொண்ட, பல குடும்பங்கள் வாழ்ந்த ஒரு கடைவீட்டில் வாழ்ந்த நாட்கள் வேலனுக்கு இன்னும் பசுமையாக நினைவுள்ளது.வீட்டின் நடுவே ஒரு சிறிய கதவு, அதைக் கடந்து படிகள் வழியே இரண்டாம் மாடிக்குச் சென்றால் அங்கே இருக்கும் பல அறைகளில் ஒன்றுதான் அவர்களின் வீடு. ஒரு பெரிய சமையலறை. கீழ்த்தளத்தில் ஒரு கழிவறை, ஒரு குளியலறை, மேலும் சில வாடகை அறைகள்.
ஒரு மெத்தை, ஓர் அலமாறி, ஒரு மடித்து வைக்கக்கூடிய மேசை, டிவி பெட்டி இவைதான் அவன் வீட்டுப் பொருட்கள்.
கண்டங் கர்பாவ் மெத்தெடிஸ்ட் சர்ச் தேவாலயத்தில் பாலர் வகுப்பில் படித்தபோது, எதிரே உள்ள காப்பிக்கடையில் கெட்டிச் சட்டினியுடன் தோசையும் அப்பமும் வாங்க 20 காசை அம்மா எண்ணி எண்ணிக் கொடுப்பதை நினைக்க இப்போது மனம் வலித்தது.
அப்பா விடியும் முன்பே வேலைக்குக் கிளம்பிவிடுவார். மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும் அப்பாவின் மேல் ஒரு துர்நாற்றம் வீசும். அவர் வீட்டுக்கு வந்துமே மூக்கைப் பிடித்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு ஓடிவிடுவான் வேலன். பிறகு மாலையில் வேலைக்குச் சென்றால் இரவு வெகுநேரம் கழித்துத்தான் வருவார். அதற்குள் வேலன் தூங்கி விடுவான்.
ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் விடுமுறையில் அப்பா, அம்மாவோடு கிராமத்துக்குச் செல்லும் நாட்களுக்காக ஆண்டு முழுவதும் காத்திருப்பான் வேலன். 1980களில் சென்னைக்கு மட்டும்தான் விமானப் போக்குவரத்து இருந்தது. எஸ்ஐஏ விமானத்தில்தான் வேலனின் அப்பா போவார். ஊர் பயணம் வைத்தாலே அப்பா புது மனிதர் ஆகிவிடுவார்.
ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே துணிமணிகள், கம்பளி, சவர்காரம், வாசனைத் திரவியங்கள், டார்ச் லைட், வானொலி, டிவி என வீட்டில் சேரத் தொடங்கும். முக்கியமாக ‘மீ லீ” நகைக்கடைக்குப் போகாமல் அப்பா விமானம் ஏறமாட்டார். அதையெல்லாம் பார்க்கப் பார்க்க எதுகேட்டாலும் “காசிலப்பா” என்று முகம் வாடும் அம்மாமீது கோபம் வரும்.
எப்போதும் அழுக்கு டி-சட்டையும் அரைக்கால் சட்டையுமாக இருக்கும் அப்பா, பயண நாளில் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்டு, கறுப்புக் கோட், கறுப்புக் கண்ணாடி, சங்கிலி, மோதிரம், சூட்கேஸ் என்று புது தோற்றத்துக்கு மாறிவிடுவார். சென்னை விமான நிலையத்தில் வந்து நிற்கும் காரை நோக்கி மிடுக்காக நடக்கும் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க வேலனுக்கு ரொம்ப பிடிக்கும்.
பெரிய மாடி வீடு, 40 மாடுகள் நிற்கும் பெரிய மாட்டுக்கொட்டகை, இரண்டு ஜோடி காளை மாடுகள், பெரிய வண்டி என்று ஒரு மாத காலம் ‘பணக்கார வாழ்க்கை’ வாழ்ந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூரின் கூண்டுக்குள் திரும்பும்போது பல நாட்கள் வேலன் தூங்காமல் அழுதுகொண்டிருப்பான்.
வேலன் உயர்நிலை ஒன்றில் படித்தபோது அந்த ஒரு மாத வாழ்வுக்கும் முடிவு வந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பேச்சுவார்த்தை நின்றுபோனது. அப்பா வீட்டில் சாப் பிடுவதில்லை. வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டார். வெளி உலகம் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த தங்கத்திற்கு சரளமாக ஆங்கிலம் வராது. பசார் மலாய் கொஞ்சம் தெரியும். அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடம் சொல்லி வைத்து முதலில் துப்புரவாளர் வேலைக்குப் போனார். பிறகு தொழிற்சாலையில் நாட்கூலி வேலைக்குப் போனார்.
வேலனிடம் அதிக கண்டிப்புடன் நடந்துகொள்ளத் தொடங்கியதும் அதன் பிறகுதான். பதின்ம வயது, கூடப்பிறந்தவர் எவரும் இல்லை, வீட்டுப் பிரச்சினைகளால் திசை மாறிவிடுவானோ என்ற பயம் அவருக்கு அதிகம்.
அம்மாவை அடிக்க வந்த அப்பாவைத் தள்ளிவிட்ட நாளிலிருந்து அப்பாவுடன் பேசுவதை அவனும் நிறுத்திக்கொண்டான். அம்மாவின் கண்டிப்பு அப்பாமீதான வெறுப்பாக வளர்ந்தது.
வேலனது அப்பா சின்ன வயதிலிருந்தே சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் நிரந்தரவாசியாகத்தான் இருந்தார். வேலனும் தங்கமும் ‘டிபெண்டண்ட்’ விசாவில் இருந்தனர்.
‘இந்தியா ஓராங், பாலே இந்தியாலா!” என்று பள்ளியில் சில மாணவர்கள் பரிகாசம் செய்யும்போதெல்லாம் வேலனின் நெஞ்சம் பதைபதைக்கும். அம்மாவும் தானும் ஊரில் அநாதையாக சுற்றுவதாகவும் பெரிய வீட்டில் வேலை செய்தவர்களெல்லாம் தன்னைப் பார்த்துக் கேலி செய்வதாகவும் கனவு வரும்.
“நான் ஏன் ஊருக்குப் போகவேண்டும்?” என்று பற்களை நெரித்தபடி, முதுகை உரிக்கும் அம்மாவின் அடிகளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் சிலரின் மூக்கை உடைத்திருக்கிறான்.
ராணுவ சேவையை முடித்து குடியுரிமை வாங்கும் வரையில் அவனுக்கு அந்தக் கனவு அடிக்கடி வரும்.
திருச்சி விமான நிலைய வாசலில் காத்திருந்த பெரியப்பா மகன் மாரிமுத்து அவர்களைக் கண்டதுமே ‘ஓ’வென்று அழத் தொடங்கினார். அதுவரை அமைதியாக கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த அம்மா, அவர் கையைப் பிடித்தபடி வெடித்து அழத்தொடங்கினார்.
வேலன் பெட்டிகளை காருக்குள் எடுத்து வைப்பதில் மும்முரம் காட்டினான்.
“இப்போதானம்மா ஒரு மாதத்திற்கு முன்னால வந்து பாப்பாவுக்கு முடியிறக்கிட்டு போனீங்க. அப்பெல்லாம் நல்லாத்தான் இருந்தாரு. இன்னும் 5 வருஷத்துல 90வது பிறந்தநாள விமரிசையா கொண்டாடனும்னுகூட சொன்னாரே.
“காலையில லேசா வயித்துப்போக்குன்னு சொன்னாரு. தொட்டுப் பார்த்தா உடம்பு அனலா கொதிச்சது. பக்கத்து ஊரு டாக்டர், உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கன்னாரு. 10 நிமிஷத்துல அங்கு போயிட்டோம். என்ன நடந்ததுன்னே தெரியல, அப்படியே மூச்ச இழுத்தவருதான்...!” அழுதபடி மாரிமுத்து அண்ணன் சொன்னதைக் காதில் வாங்கியவாறே, தலையில் அடித்துக்கொண்டு அழும் அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தான் வேலன்.
கிராமத்தில் ஒரு நாளைக்கு மேல் உடலை வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் வரும்வரையில் உடலை ஐஸ் பெட்டியில் வைக்க ஊர் பெரியவர்களுடன் சண்டை போட்டு ஏற்பாடு செய்தவர் மாரிமுத்து அண்ணன்தான்.
ஊர் எல்லையை அடையும் முன்னரே சாவின் சத்தம் கேட்கத் தொடங்கியது. வீட்டின் வெளியே மேள, தாள வாத்தியங்கள் இசைத்துக்கொண்டிருந்தன. ஒரு புறம் ஒப்பாரி வைக்க, மறுபுறம் குறவர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். கூட்டத்தை மெல்ல விலக்கியவாறே வீட்டினுள் நுழைந்தான் வேலன்.
அந்தக் கிராமத்துக்கு வந்திருக்கும் முதல் ஐஸ் கண்ணாடிப் பெட்டியைத் தொட்டுப் பார்ப்பதற்காக சிறுவர்களும் பெண்களும் கூட்டமாக வந்துபோய்க்கொண்டிருந்தனர். அவன் பெட்டி அருகே போனதும் அருகில் நின்றவர்கள் விலகினர். பெட்டியைத் தொட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவனின் பக்கத்தில் வந்து சிலர் தோளில் கைவைத்துத் தேம்பத் தொடங்கினர்.
கல்பனா அழுவதைப் பார்த்து நிலாவும் அழத் தொடங்கிவிட்டாள்.
“தம்பி.... இப்படி உங்களத் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே,” என்றபடி அவன் அருகில் வந்த ஒரு மூதாட்டியை மெல்ல விலக்கியபடி, சட்டையைக் கழட்டிக்கொண்டே வாசல் பக்கம் நடந்தான். ஒப்பாரி வைக்கும் பெண்களுக்கு நடுவே பெருங் குரலெடுத்து அழுது கொண்டிருக்கும் அம்மாவின் பக்கம் திரும்பாமலே, “காரியத்த தொடங்குங்க!” என்றான் மாரிமுத்து அண்ணனைப் பார்த்தபடி.
வேலனின் அப்பா கைக்குழந்தையாக இருந்தபோது சிங்கப்பூருக்கு வந்த அவருடைய தந்தை குழந்தைவேலு, ஜப்பான்காரன் போட்ட குண்டில் இறந்துவிட்டார்.
தந்தை முகம் தெரியாத வேலனின் அப்பா 13 வயதில் சிங்கப்பூர் வந்து, தாய்மாமாவின் நிழலில் வளர்ந்தார். படிப்பு இல்லாததால் பொதுப் பயனீட்டுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். குப்பை அள்ளும் லாரி பின்னால் ஓடி குப்பைகளை அள்ளிக்கொட்டும் தொழிலாளியாக ஓடி ஓடி உழைத்தார்.
லாரியின் பின்னால் இரு புறங்களிலும் இருக்கும் சிறிய இடத்தில் நின்றவாரே இரு ஊழியர்கள் பயணிக்கவேண்டும். லாரி நகர்ந்துகொண்டே இருக்கும், அதன் பின்னால் ஓட்டமும் நடையுமாக ஊழியர்கள் செல்ல வேண்டும். சில சமயம் வெறும் கைகளால் குப்பைகளை அகற்றவேண்டும், கனமான பெரிய பொருட்களைத் தூக்கிப் போடவேண்டும். கத்தி, ஊசி, துரு பிடித்த இரும்புச் சாமான்கள் கைகளைப் பதம் பார்க்கும், மாத வருமானம் $300-$400 வரைதான். முற்பகல் 2 மணி முதல் காலை 10 மணி வரை இந்த வேலையை முடித்துவிட்டு பின்பு கார் கழுவும் வேலை பார்த்தார் அப்பா.
அதற்காகவே இந்திய ஹெர்குலீஸ் சைக்கிள் ஒன்றை ரோச்சோர் ரோடு சந்தையில் வாங்கி இருந்தார். சைக்கிள் கேரியரில் ஒரு பெரிய வாளி, கார் கழுவுவதற்கான பஞ்சு, துணிகள், சோப்பு. வாளியையும் கேரியரையும் சேர்த்துக் கட்ட காற்று வெளியேற்றப்பட்ட மிதிவண்டி டயர் இவற்றைக் கொண்டு 60க்கும் மேற்பட்ட கார்களைக் கழுவுவார். அதில்தான் காசு பார்ப்பார். மாதம் கிட்டத்தட்ட $3,000 வரை கிடைக்கும்.
இரவில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள காப்பிக்கடையில் மேசை துடைப்பது, தட்டு, குவளைகளையும் கழுவுவது என்று எடுபடி வேலை பார்ப்பார். அவ்வப்போது தோட்ட வேலை, பஸ் டிப்போவில் இரவில் பேருந்துகளைக் கழுவுவது என்று வேறு வேலைகளையும் செய்வார். மாதம் $4,000க்கு மேல் வருமானம் ஈட்டினார். ஆனால் வீட்டுச் செலவுக்கு எந்த சமயத்திலும் $500க்கு மேல் கொடுக்கமாட்டார்.
சம்பாதிக்கும் பணத்தை அப்படியே முதல் மனைவிக்கு அனுப்பி வைத்துவிடுவார். விவசாய நிலம், ஆடு, மாடு, தோட்டம், கொல்லை என ஊரில் சொத்துகள் சேர்ந்தது.
அவருக்கென்று அவர் செய்யும் ஒரே செலவு தமிழ் முரசு படிப்பதுதான். தமிழவேள் கோ சாரங்கபாணியின் தலையங்கங்களினாலும் அவரது முற்போக்குச் சிந்தனையாலும் கவரப்பட்டவர்களில் வேலனின் தந்தையும் ஒருவர்.
தமிழர்களைச் சிங்கப்பூர் குடியுரிமை பெற கோசா ஊக்குவித்தபோது தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு தமிழர் சீர்திருத்தச் சங்கம் சென்ற அப்பாவை அவரது தாய்மாமா பார்த்துவிட்டார்.
“சிங்கப்பூர் சிடிசன் ஆனா உன் இந்திய பாஸ்போர்ட்ட எடுத்துக்குவான், அப்புறம் நீ ஊருக்கு போக முடியாது, அங்க நிலம் வாங்க முடியாது. நமக்கு இங்க என்ன இருக்கும்? வந்தோமா, சம்பாதிச்சோமா, முடியாத காலத்துல ஊருக்குப் போனோமான்னு இரு,” என்று மாமா கூற, மறுபேச்சு பேசாமல் வீட்டுக் குத் திரும்பிவிட்டார் அப்பா.
கடைசி காலம் வரையில் நிரந்தரவாசியாகவே இருந்த அப்பா, ஐந்தாண்டுகளுக்கு முன் அதையும் ரத்து செய்து, மத்திய சேமநிதி பணத்தையும் எடுத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார். உழைத்து சேர்த்த சொத்து எதுவும் அவர் பெயரில் இல்லை என்பது அங்கு போன பிறகுதான் தெரியவந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு அவனது போனில் அப்பாவின் குரல்.
“தம்பி. இங்க ஒரு எட்டு வந்திட்டு போக முடியுமா?”
“எனக்கு நேரமில்லை” அதன் பிறகு அப்பாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வரவில்லை.
“ஆக வேண்டியதைப் பாருங்க!” என்று யார் யாரோ உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
ஈர உடம்போடு நீர்க்குடம் சுமந்து உடலைச் சுற்றி வந்து நீரை ஊற்றியபோது, அப்பா தன்னை ஒருமுறை கூட குளிப்பாட்டி விட்டதில்லை என்பது நினைவுக்கு வந்தது. அப்பாவோடு கடலில் குளிக்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை. ஈஸ்ட் கோஸ்ட் பீச்சுக்குப் போகலாம் என்று பலமுறை அப்பாவிடம் கெஞ்சியிருக்கிறான்.
அப்பா அங்கே வேலைக்குப் போனபோதுகூட அவனைக் கூட்டிப் போனதில்லை. அப்பாவின் மீது பட்டு வேட்டியைப் போர்த்தும்போது சிங்கப்பூரில் இருந்தவரையில் அப்பா தனக்கு பட்டு வேட்டி வாங்கிக்கொள்ளாதது உறைத்தது.
தங்கத்துக்கும் வேலனுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை, தைப்பொங்கலுக்கு புதுத்துணி வாங்குவார். தனக்கு அரைக்கால் சட்டையும் டீ சட்டையும் வாங்கிக்கொள்வார். அதையே பெரிய செலவாக பல மாதங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். அப்பா தீபாவளி கொண்டாடமாட்டார். தீபாவளிக்கு நண்பர்கள் புதுச் சட்டை போடும்போது தனக்கும் வேண்டும் என்று வேலன் பலமுறை அடம்பிடித்திருக்கிறான். அப்போதெல்லாம் “பிள்ளையை வளக்கத் தெரியல்ல” என்று தங்கத்துக்கு அடிவிழும்.
வெடிச் சத்தமும் மேளச் சத்தமும் ஆட்டமும் பூச்சொரிதலுமாக மிகவும் விமரிசையாக பாடைக்குப் பின்னால் கையில் தீச்சட்டியுடன் நடந்த வேலனுக்கு தைப்பூசத்துக்கும் தீமிதிக்கும் ஒருபோதும் தன்னை அனுப்பாத அப்பாவை நினைத்து மெல்லிய கோபம் எழுந்தது. தன் இளமையே அப்பாவால் கருகிப் போனதாகத் தோன்றியது.
விறகுகள், வரட்டிகள், வைக்கோல் என எளிதாக எரியும் பொருட்களுக்கு நடுவே அப்பாவின் உடல் வைக்கப்பட்டது. எல்லாரும் கடைசியாக முகம் பார்த்தனர்.
குளத்திலிருந்து சேற்றை அள்ளி வந்த பங்காளிகள் உடலைக் கூட்டுக்குள் வைத்து அடைக்கத் தொடங்கினர்.
“இதையெல்லாம் செய்ய ஆள் இருப்பார்களே?”
“ஓ!... வெட்டியான சொல்றீங்களா? இப்போ யாரும் இந்த தொழிலுக்கு வாரதில்ல. எல்லாம் படிச்சிட்டு டௌவுனுக்கு போய் வேலை பார்க்குறாக. எல்லாத்தையும் நாமளேதான் பார்க்கணும்,” என்ற பெரியவர் ஒருவர், “கடைசியா முகத்த பாக்கணுமா?” என்றார்.
அவனது தலையாட்டலை அவர் கவனிக்கவில்லை. அவனுக்காக முகத்தை மூடாமல் பேசிக்கொண்டே இருந்தார்.
“இருந்தவரைக்கும் நல்ல திடகாத்திரமா வாழ்ந்த மனுஷன். சூதுவாது தெரியாது. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. யாருக்கும் கெடுதல் நெனச்சதில்ல. அடுத்தவங்க காசுக்கு ஆசப்பட்டதில்ல, யார் குடியையும் கெடுத்ததில்ல.
“மூத்த தாரத்தை தனியாவிட்டுட்டு போயிட்டோம். பிள்ளையில்ல, புருசனும் பக்கத்தில இல்லையேன்னு அவ மனசு நோகக்கூடாதுன்னு சம்பாரிச்சதையெல்லாம் ஊருக்கு அனுப்பி வெச்சாரு. ஆனா, இங்க வந்திட்டப் பிறவும் உங்க நினெப்புதான் அவருக்கு. உன்னப் பத்தியும், நிலாவப் பத்தியும் பேசாத நாளில்ல. சிங்கப்பூர் பாஸ்போர்ட்ட வெட்டிகிட்டு வந்தாலும் திரும்ப அங்க போய் இருந்துட்டு வரனும்னு சொல்லிகிட்டே இருப்பாரு. பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்னு வருத்தப்படுவாரு. ம்ம்... நடக்குறத யாரு தடுக்க முடியும்?” அவரது நினைவிலிருந்து மீட்டு மீட்டு பேசிக்கொண்டே இருந்தார்.
“நீ கவலப்படாதே, நாங்க பாத்துக் குறோம்,” என்ற மாரிமுத்து, “கொள்ளியை வை ஐயா” என்றார். முதலில் நெஞ்சிலும் பிறகு தலையிலும் காலிலும் என்று முறையாக தீயை வைக்கச் சொல்லிக்கொடுத்தார்.
தீ கொழுந்துவிட்டு எரிவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தவனை மாரிமுத்து அண்ணன் குளத்துக்கு அழைத்துச் சென்றார்.
நீரில் முங்கி எழுந்து நடக்கும்போது வேலனுக்கு யாருடனும் பேசத் தோன்றவில்லை. எவர் பேசுவதும் காதில் விழவில்லை.
வீட்டுக்கு வந்தவன் வாசலில் நின்று அப்பெரிய வீட்டின், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய தனி மரத்தாலான கதவைச் சில நொடிகள் பார்த்தான். திறந்திருந்த கதவின் ஊடே நேரே பெல் பாட்டம் பேண்டு, பெரிய காலர் வைத்த சட்டையுடன், பெரிய தங்கச் சங்கிலியும் சுருட்டை முடியுமாக அப்பா. அவர் பக்கத்தில், கொஞ்சம் இடைவெளிவிட்டு பெரிய பெண்ணாக வேடமிட்ட சிறுமிபோல் பட்டுப்புடவைக்குள் மறைந்திருந்த அம்மா. அம்மாவின் கை கொள்ளாமல் கொழுகொழுவென்றிருந்த வேலன் அப்பாவின் திசையில் தாவிக்கொண்டிருந்தான். அப்பாவின் முகம் நேராகப் பார்த்தபடி இருந்தது. ஐபேட்டில் விளையாடியபடி நிலா வந்துகொண்டிருந்தாள்.
“அப்பா!”
வேலன் பெருங்குரல் எடுத்து அழுதபடி தரையில் விழுந்தான்.