வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் அனைவருமே கட்டாய தனிமைப்படுத்தலுக்கான செலவை ஏற்க வேண்டியிருக்கும்.
அத்துடன், அந்நாட்டிற்கு பயணம் செய்வதற்கு முன்னர் செலவுத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொள்ளும் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மூத்த அமைச்சர் சப்ரி இஸ்மாயில் யாகோப் அறிவித்துள்ளார்.
மலேசியர்கள் தனிமைப்படுத்தல் சேவைகளின் பாதிச் செலவை செலுத்துவார்கள். அதேநேரத்தில் மலேசிய குடியுரிமை உள்ளவர்களின் வாழ்க்கைத்துணை, குடும்ப உறுப்பினர்கள் உட்பட அந்நாட்டு குடியுரிமை இல்லாத அனைவரும் முழு செலவையும் ஏற்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
“ஜூன் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். கொவிட்-19 பரவலைத் தடுக்க வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள், தொடர்ந்து கட்டாய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுவார்கள்,” என்று அவர் நேற்று (மே 20) தெரிவித்தார்.
மலேசிய குடிமக்கள் ஒரு நாளின் செலவான 150 ரிங்கிட்டில் (சிங்கப்பூர் வெள்ளி 48.75) 50 விழுக்காட்டைச் செலுத்த வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
மலேசியாவுக்குத் திரும்ப விரும்புவோர் அவர்கள் தற்போதிருக்கும் நாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்களில் தனிமைப்படுத்தப்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ள உடன்படும் கடிதத்தில் கையெழுத்திடலாம். கையெழுத்திட்ட பின்னர், அவர்கள் மலேசியாவுக்கு திரும்ப அனுமதிக்கும் கடிதத்தையும் அந்த அலுவலகம் வழங்கும் என திரு இஸ்மாயில் சப்ரி விவரித்தார்.
மலேசியாவில் இறங்கும் அனைத்துப் பயணிகளும் இந்த கடிதத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க அனைத்து விமான நிறுவனங்களுக்கும் குடிநுழைவுத் துறை உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
தற்போது வரையில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய 38,371 மலேசியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், 30,200 பேர் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online