மலேசியாவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே மாமன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள முகைதீன் யாசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
பழுத்த அரசியல்வாதியான டாக்டர் மகாதீர், வயது 94, 1981 முதல் 2003 வரை பிரதமராக நாட்டை வழி நடத்தியவர். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த கூட்டணியைத் தோற்கடித்து மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்று அனைவரையும் வியக்க வைத்தவர்.
ஆனால் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
இந்த நிலையில் மலாய் மொழி பத்திரிகையான சினார் ஹரியானுக்குப் பேட்டியளித்த டாக்டர் மகாதீர், ஆதரவாளர்களில் சிலர் முகைதீன் முகாமுக்கு தாவிவிட்டதால் தமக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று கூறினார்.
“எங்களுக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது அது குறைந்துவிட்டது,” என்று கூறிய அவர், “நம்பிக்கையில்லாத் தீர் மானம் வெற்றி பெறாது,” என்றார்.
“என்னுடைய ஆதரவாளர்களை அவர் தமது பக்கம் ஈர்த்துக்கொண்டார்,” என்றும் அவர் கூறினார்.
டாக்டர் மகாதீருக்கு நாடாளுமன்றத்தில் குறைந்தது 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் அவரது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பழைய எதிரியான அன்வார் இப்ராஹிம், மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் இரண்டு மாதம் தாமதமாக நாடாளுமன்றம் கூடுவதால் பிரதமர் முகைதீனுக்கு தேவையான ஆதரவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் மகாதீரும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள் என்று பிரதமர் முகைதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#மலேசியா #முகைதீன் #மகாதீர் #அரசியல்