சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போருக்கு கிருமித்தொற்று பரவியுள்ள நிலையில், அதனால் மலேசிய ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிங்கப்பூரில் இரண்டு மலேசியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவற்றில் 36 வயதான ஒருவர் முஸ்தஃபா நிலைய கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர். அந்தக் கிருமித்தொற்று குழுமத்தில் 57 பேர் உள்ளனர்.
29 வயதான மற்றொரு மலேசியருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் முறையே, சாங்கி பொது மருத்துவமனையிலும் தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக சிங்கப்பூரில் சுகாதார அமைச்சின் இணையப்பக்கம் தெரிவிப்பதக பெர்னாமாவின் செய்தி குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஐந்து இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வசிப்போர் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வர்.
சிங்கப்பூரில் மொத்தம் 43 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் சுமார் 200,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பங்ளாதேஷ், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
பெரும்பாலான மலேசிய ஊழியர்கள் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கு தினமும் சென்று வேலைபார்த்துவிட்டு ஊர் திரும்புவதையே விரும்புகின்றனர் என்று அந்தச் செய்தி குறிப்பிட்டது.
நேற்றைய நிலவரப்படி நல்ல உடல்நலத்துடன் இருக்கும் சுமார் 5,000 ஊழியர்கள் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களுக்கு மாற்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர்.