மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் இருக்கும் இவ்வேளையில் பகுதி ஊழியர்களுடன் இயங்கி வரும் பல பொருளியல் பிரிவுகள், நாளை (ஏப்ரல் 29) முதல் கூடுதலான ஊழியர்களுடன் முழு திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று மலேசியாவின் அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நிறுவனங்கள், பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தவறினால், மூடல், சட்ட நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செயல்படுவதற்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று இன்று அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
மெஷினரி, விமான தொழில்துறை, ஏற்றுமதி சார்ந்த வாகன தொழில்துறை, சுரங்கப் பணிகள், சாய்வு பராமரிப்பு போன்ற பலவகையான கட்டுமானத் திட்டப்பணிகள், வன்பொருள், மின்னியல் மற்றும் மின்னணுவியல் கடைகள் போன்றவை பகுதி ஊழியர்களுடன் பாதி திறனுக்குச் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
நடமாட்டக் கட்டுப்பாடு நடப்புக்கு வந்து 42 நாட்களான நிலையில், இன்று மலேசியாவில் புதிதாக 31 கிருமித்தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவாகின. கடந்த மாதம் 12ஆம் தேதிக்குப் பிறகு, இது ஆகக் குறைவான எண்ணிக்கை.
மலேசியாவில் மொத்தம் 5,851 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக பதிவு செய்யப்பட்டதையும் சேர்த்து மரண எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.
இதுவரை 4,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கொவிட்-19லிருந்து மீளும் நிலையில் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடிகள் பற்றி நேற்று பிரதமர் முகைதீன் யாசினுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த அறிவிப்பை இன்று அமைச்சர் அஸ்மின் அலி வெளியிட்டுள்ளார்.