நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இன்று (ஏப்ரல் 23) அறிவித்தார்.
நடப்பில் உள்ள மூன்றாவது கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 28ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக, மதியம் 12 மணி வரை இயங்கி வந்த ஈரச் சந்தைகள், நோன்பு திறப்புக்கான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக இனி மதியம் 2 மணி வரையில் செயல்படும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரமலான் நேரத்தில் சொந்த ஊருக்குச் செல்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
தற்போது கிராமப்புறத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மட்டுமே அதிகாரிகளிடம் பயண அனுமதிக்குப் பதிவு செய்து பின் திட்டமிட வேண்டும் என்றார் அவர்.
புதிதாக 71 பேருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,603ஆக உயர்ந்துள்ளது. 95 பேர் பலியாகினர். இதுவரை மொத்தம் 3,542 பேர், அதாவது 63.2 விழுக்காட்டினர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.