பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட முதல் நாளில் பெரும்பாலானோர் விதிமுறையைப் பின்பற்றியதாக ‘தி ஸ்டார்’ செய்தி கூறுகிறது.
பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குறிப்பாகக் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளான சந்தைகள், கடைத்தொகுதிகள் மற்றும் பொது போக்குவரத்து முனையங்கள் போன்ற இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்ததது.
மலேசியாவில் கடந்த வாரம் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, முகக்கவசம் அணிவது நேற்று முன்தினம் முதல் கட்டாயமாக்கப்பட்டது.
அவ்வாறு முகக்கவசம் அணியாதவருக்கு 1,000 ரிங்கிட் அபராதமோ அல்லது ஆறு மாத சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.
இதையடுத்து, மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக சாலையெங்கும் போலிசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் ஒரு சிலர், விதிமுறைகளில் சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தனியாக காரில் செல்லும் போதும், பூங்காக்களில் உடற்பயிற்சி செய்யும்போதும் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, முகக்கவசம் அணியாததற்காக 127 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.