மலேசியாவில் முழுக்க முழுக்க ஊழியர்களைச் சார்ந்திருக்கும் செம்பனை எண்ணெய் நிறுவனங்கள் கொரோனா கிருமிப் பரவலால் கடுமையான ஆள் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றன.
உலகளவில் இரண்டாவது பெரும் செம்பனைத் தோட்டத் தொழிலைக் கொண்ட மலேசியாவின் செம்பனை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பல அண்மையில் ஆள் நியமன முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டன. செம்பனைத் தோட்டங்களில் உரமிடுதல் முதல் அறுவடை செய்வது வரையிலான பலதரப்பட்ட வேலைகளுக்கு உள்ளூர்வாசிகளை நியமிக்க விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஆயினும் அதற்கான வரவேற்பு மிகவும் மந்தமாக இருந்தது. தோட்டத் தொழிலை செய்ய பலரும் முன் வரவில்லை. செம்பனைத் தோட்ட மொத்த ஊழியர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் இந்தோனீசியா மற்றும் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள். ஆபத்தானது, கடினமானது, அழுக்கு படக்கூடியது என்ற காரணங்களால் உள்ளூர்வாசிகள் பெரும் பாலும் இவ்வேலைக்கு வருவதில்லை.
கொரோனா பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு களும் நடமாட்டக் கட்டுப்பாடுகளும் சுமார் 37,000 ஊழியர்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்திவிட்டன. இது அந்தத் தொழிலின் மொத்த ஊழியரணியில் கிட்டத்தட்ட பத்து விழுக்காடு. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை செம்பனை பருவகாலம். இப்பருவத்தைத் தப்பவிட்டால் உற்பத்தி மோசமடையும். அது இத்தொழிலில் முதன்மையாக விளங்கும் இந்தோனீசியாவிடம் வர்த்தக வாய்ப்புகளைப் பறிகொடுக்கும் நிலைமையை ஏற்படுத்திவிடும். தற்போது வரை இந்தோனீசியாவில் இத்தொழிலுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படவில்லை.
ஏற்கெனவே கிருமிப் பரவலால் ஊழியர் பற்றாக்குறையும் தாமதமான அறுவடையும் இத்தொழிலில் சுமார் 30 விழுக்காடு நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக மலேசிய செம்பனை எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் மதிப்பிட்டு உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 19.90 மில்லியன் செம்பனை கச்சா எண்ணெய் அளவைக் காட்டிலும் உற்பத்தி பெரிய அளவில் வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே செம்பனைத் தொழிலுக்கு போதைப் புழங்கியாக இருந்து மீண்டவர்களையும் சிறைக்கைதிகளையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மலேசிய போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தையும் சிறைத் துறையையும் தாங்கள் நாடியிருப்பதாகவும் அறிக்கை கூறியது.
கிருமிப் பரவலால் மலேசியாவின் செம்பனைத் தோட்டத் தொழிலில் கடும் ஆள் பற்றாக்குறை