மலேசியாவில் திடீரென பொதுத் தேர்தலை நடத்துவது கொவிட்-19 தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என அந்நாட்டின் முக்கிய மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
திடீரென தேர்தல் நடத்தினால் என்ன நிகழ வாய்ப்புள்ளது என்பதற்கு, அண்மையில் இடம்பெற்ற சாபா சட்டமன்றத் தேர்தல் நமக்குப் பாடம் கற்றுத் தந்துள்ளது என்று மலாயா பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியர் லாம் சை கிட் தெரிவித்துள்ளார்.
“சாபா மாநிலத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், விரைவில் பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. அவ்வாறு செய்வது தவறான நடவடிக்கையாகிவிடும். பொதுத் தேர்தல் குறித்துப் பரிசீலிக்க இது சரியான நேரமல்ல,” என்று திரு லாம் கூறினார்.
‘நிபா’ கிருமியைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றிய திரு லாம், பொதுத் தேர்தலை நடத்துவது சாபாவைக் காட்டிலும் கொரோனா தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துவிடும் என்றார்.
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 101 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் சாபாவில் மட்டும் 75 சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
“தேர்தல் பிரசாரங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். அடிக்கடி அரசியல் ஒன்றுகூடல்கள் இடம்பெறும். நாடு முழுவதும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். வாக்களிப்பதற்காக மக்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப வலியுறுத்தப்படுவர்,” என்றார் திரு லாம்.
அத்துடன், திடீர் தேர்தல் நடத்தப்படுவது முன்களப் பணியாளர்கள் மீதும் சுகாதாரச் சேவைகள் மீதும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
நாடு முழுமைக்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் என்ன நிகழும் என்பதற்கு சாபா தேர்தல் ஒரு பாடம் என்றார் மலேசிய மருத்துவர்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் முனியாண்டி.
இப்போதைக்குப் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியமுள்ளதா என்பது குறித்து அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் சுகாதார அமைச்சுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கருத்தறியப்பட வேண்டும் என்றும் டாக்டர் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாபா சட்டமன்றத் தேர்தலில் தமது ‘சாபா மக்கள் கூட்டணி’ வெல்லும் பட்சத்தில் முன்னதாகவே பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கடந்த மாதம் 18ஆம் தேதி கூறியிருந்தார்.